முன்கூட்டியே சட்டசபை தேர்தல்; பிப்., 2ல் இடைக்கால பட்ஜெட்: தி.மு.க., அரசு திட்டம்
முன்கூட்டியே சட்டசபை தேர்தல்; பிப்., 2ல் இடைக்கால பட்ஜெட்: தி.மு.க., அரசு திட்டம்
ADDED : ஜன 22, 2026 04:55 AM

சென்னை: முன்கூட்டியே சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், பிப்ரவரி 2ம் தேதி, தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஆண்டுதோறும் பிப்ரவரி, 1ம் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, மாநில அரசுகளின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, 2025ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட், கடந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் நிர்வாக செலவுகளை கவனிப்பதற்காகவும், எஞ்சியுள்ள திட்டங்களுக்கு நிதி விடுவிப்பதற்காகவும், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
கடந்த 2021 சட்டசபை தேர்தல், அதே ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி நடந்தது. இதற்கான தேர்தல் நடத்தை விதிகள், 2021 மார்ச் 12ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தன. அவசரமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அப்போதைய அ.தி.மு.க., அரசால், பல பணிகளை மேற்கொள்ள முடியாமல், ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்தது.
இப்போது முன்கூட்டியே, நடப்பாண்டு சட்ட சபை தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து உஷாரான தமிழக அரசு, இடைக்கால பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது.
மத்திய அரசு, பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தவுடன், 2ம் தேதி தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக பணிகளில் கவனம் செலுத்தும்படி அனைத்து துறை செயலர்கள் மற்றும் கலெக்டர்களுக்கு, தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவுகள் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

