ADDED : நவ 20, 2024 05:33 AM

திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலுக்கு பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா நேற்று வந்து மூலவரை தரிசித்தார்.
பின், அவர் அளித்த பேட்டி: புதுடில்லியில் மாசு அதிகரித்துள்ளது. அதனால், பல தீங்குகள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முழு முதல் காரணம் டில்லி அரசின் மோசமான செயல்பாடுதான்.
தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி, தன் பெயரை பொய்மொழி என மாற்றி வைத்துக் கொள்வது நல்லது. அந்த அளவுக்கு பொய் பேசுகிறார். அவர் சொல்லும் அனைத்துத் தகவல்களுமே பொய். இப்படித்தான் மற்ற அமைச்சர்களும் உள்ளனர். மொத்தத்தில், தி.மு.க., அமைச்சர்கள் ஒருவருக்குக்கூட நிர்வாகம் செய்ய தெரிவில்லை.
தமிழகத்தில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் இணை ஆணையர் தலைமையின் கீழ் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூட்டம் நடத்தவில்லை. அது ஏன்?
மத்திய அரசு, பட்டியல் சமுதாய மக்களுக்கு ஒதுக்கிய 5,000 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு திருப்பி அனுப்பி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதுதான் நடக்கிறது. மேலும், 14வது நிதி குழு பரிந்துரையின் பேரில் 32 சதவீதம் வெர்டிக்கல் நிதி பகிர்மானத்தை, 42 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
அரசின் நல திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் சூட்டுவதற்கு பதிலாக, சுதந்திரப் போராட்டத்திற்கும், தமிழுக்கும் போராடிய தலைவர்களின் பெயர்களை சூட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புழல் சிறையில் கஸ்துாரிக்கு கொடுமை!
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்துாரியின் உயிருக்கும், உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தரும் வகையில் போலீசார் மற்றும் சிறைத் துறையினர் ஈடுபடுவதாக தெரிகிறது. நீதிமன்றம் தான் கஸ்துாரிக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
கஸ்துாரி பேசியது அவதுாறு என்றால், வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுக்கு பின், அவரை கைது செய்திருக்கலாமே. சட்டம் அதைத்தான் சொல்கிறது. இப்படித்தான், எதிர் தரப்பினரை பழிவாங்கும் நோக்கோடு, தமிழக அரசு நடந்து கொள்கிறது.
- எச்.ராஜா, தலைவர், தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு

