ADDED : நவ 17, 2025 01:47 AM

நாமக்கல்: கோழிப்பண்ணை வரலாற்றில் முதல் முறையாக, முட்டை கொள்முதல் விலை, 600 காசுகளை எட்டி, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் தினமும் ஆறு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவான நெக் தினமும் நிர்ணயிக்கிறது. கடந்த, 2024 டிச., 9ல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 590 காசாகி, முட்டை வரலாற்றில் உச்சபட்ச விலையாக அமைந்தது.
கடந்த, 14ல் மீண்டும், 590 காசை தொட்ட நிலையில், நேற்று முன்தினம் 595 காசாக உயர்ந்து, முந்தைய சாதனையை உடைத்தது. இந்நிலையில் 'நெக்' மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில், 600 காசாக முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இதன் மூலம் முதல் முறையாக, 600 காசுகள் என்ற புதிய உச்சத்தை முட்டை எட்டியுள்ளது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஒரு கிலோ முட்டைக்கோழி, 112 ரூபாய், ஒரு கிலோ கறிக்கோழி, 104 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

