ADDED : மார் 01, 2026 05:30 AM

திருச்சி: இலவச மின் இணைப்பு வழங்க, 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய இளநிலை மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், துறையூர், கோம்பையை சேர்ந்தவர் விவசாயி முத்து. அவரது விவசாய நிலத்திற்கு, இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
தாட்கோ மூலம் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, அவருக்கு இலவச மின் இணைப்பு வழங்க உத்தரவு வந்தது.
அவருக்கு மின் இணைப்பு வழங்க தாமதமானதால், பிப்., 27ல் செங்காட்டுப்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற முத்து, இளநிலை மின் பொறியாளர் ராஜு என்பவரை சந்தித்து, இலவச மின் இணைப்பு வழங்க கேட்டுள்ளார். அதற்கு ராஜு, 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்து, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் அறிவுரைப்படி, நேற்று, துறையூர் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்ற முத்து, ராஜுவிடம், 3,000 ரூபாயை கொடுத்தார். அங்கு வந்த போலீசார், ராஜுவை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.

