4 மாதமாகியும் நிதிநிலை அறிக்கை வெளியிடாத மின்சார வாரியம்
4 மாதமாகியும் நிதிநிலை அறிக்கை வெளியிடாத மின்சார வாரியம்
ADDED : ஆக 14, 2025 02:01 AM

சென்னை: ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யும் மின் வாரியம், 2024 - 25ம் நிதியாண்டு முடிவடைந்து நான்கு மாதங்களாகியும், அந்த ஆண்டின் வரவு - செலவு அடங்கிய நிதிநிலை அறிக்கையை வெளியிடாமல் உள்ளது.
தமிழக மின் வாரிய மானது, மின் உற்பத்தி கழகம், மின் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம், பசுமை எரிசக்தி கழகம் ஆகிய நிறுவனங் களாக செயல்படுகிறது.
தமிழகம் முழுதும் மின் வினியோகம் செய்வது உட்பட, மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள மிக முக்கியமான நிறுவனமாக மின் பகிர்மான கழகம் உள்ளது.
இந்நிறுவனம், 2023 - 24ல் மின் கட்டணம் வாயிலாக, 98,883 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. அதேசமயம் செலவு, 1.08 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
மின் கொள்முதலுக்கு மட்டும், 55,892 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டு துவங்கி, நான்கு மாதங்கள் முடிவடைந்து விட்டன.
ஆனாலும், 2024 - 25ம் நிதியாண்டிற்கான வரவு - செலவு உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய நிதிநிலை அறிக்கையை வெளியிடாமல், மின் வாரியம் தாமதம் செய்கிறது.
இதனால், அந்த விபரங்களை மக்களால் தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணி முடிந்து தணிக்கையில் உள்ளது; விரைவில் வெளியிடப்படும்' என்றார்.

