ரூ.5000 இடைக்கால நிவாரணம் மின் ஊழியர்கள் வலியுறுத்தல்
ரூ.5000 இடைக்கால நிவாரணம் மின் ஊழியர்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 10, 2025 02:14 AM
சென்னை,:ஊதிய உயர்வு வழங்கப்படும் வரை, இடைக்கால நிவாரணமாக மாதம், 5000 ரூபாய் தருமாறு, மின் வாரியத்திற்கு, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக மின் வாரியத்தில் பணிபுரிவோருக்கு நான்கு ஆண்டுகளுக்கு, ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, 2023 டிச., முதல் புதிய ஊதியம் வழங்கப்பட வேண்டும். இதை நிர்ணயம் செய்ய, மின் பகிர்மான நிதி பிரிவு இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன், கடந்த மாதம் 24ம் தேதி பேச்சு நடத்தியது. இன்னும் ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே, இடைக்கால நிவாரணமாக மாதம், 5000 ரூபாய் வழங்குமாறு, மின் வாரியத்திற்கு, பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச்செயலர் சுப்ரமணியன் கூறியதாவது: ஊதிய உயர்வு தொடர்பான முதல்கட்ட பேச்சு முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட பேச்சை விரைவில் துவக்கி, புதிய ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். பேச்சு நடத்துவதை காரணம் காட்டி, ஊதிய உயர்வு வழங்குவதை இழுத்தடிக்க கூடாது. ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்படும் வரை, இடைக்கால நிவாரணமாக மாதம், 5000 ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.