கோவில் குளங்களில் ஆக்கிரமிப்பு அகற்றணும்: தஞ்சாவூர் கலெக்டருக்கு ஐகோர்ட் கெடு
கோவில் குளங்களில் ஆக்கிரமிப்பு அகற்றணும்: தஞ்சாவூர் கலெக்டருக்கு ஐகோர்ட் கெடு
ADDED : ஆக 19, 2024 02:23 PM

சென்னை: 'கும்பகோணம் கோவில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், அக்டோபர் 28ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்' என தஞ்சாவூர் கலெக்டருக்கு சென்னை ஐகோர்ட் கெடு விதித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், கும்பகோணம் கோவில் குளங்கள், நீரோடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை.
அவமதிப்பு வழக்கு
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என வழக்கறிஞர் ராஜேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சுப்பிரமணியன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ''கும்பகோணம் கோவில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், அக்டோபர் 28ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும்.
உத்தரவு
மாற்று இடம் வழங்கி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்ததில் இருந்து அவர் கலெக்டர் ஆக இருக்க தகுதியானவர் இல்லை என தெளிவாகிறது. கும்பகோணம் கோவில் குளங்கள், அதற்கு நீர் செல்லும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரத்தில் அகற்ற வேண்டும்'' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

