சட்ட விரோத செயலில் அமலாக்கத்துறை ஈடுபடுகிறது: சிதம்பரம் குற்றச்சாட்டு
சட்ட விரோத செயலில் அமலாக்கத்துறை ஈடுபடுகிறது: சிதம்பரம் குற்றச்சாட்டு
UPDATED : டிச 22, 2025 07:21 AM
ADDED : டிச 22, 2025 03:44 AM

சென்னை: ''சட்ட விரோத செயலில் அமலாக்கத்துறை ஈடுபடுகிறது,” என காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
மறைந்த முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பிறந்தநாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்திபவனில், அவரது உருவப்படத்திற்கு, சிதம்பரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின், சிதம்பரம் அளித்த பேட்டி: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் மீதான, 'நேஷனல் ஹெரால்டு' வழக்கை பொறுத்தவரை, முதல் தகவல் அறிக்கை, பதிவு செய்யாத வழக்கு. தனி நபர் ஒருவர் கொடுத்த புகார் அடிப்படையில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கில், சட்ட விரோத செயலில், அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது.
பணப்பரிமாற்றம் என்பது குற்றமல்ல; சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்வதே குற்றம். அப்படி நடந்தால், போலீஸ் துறை, புலனாய்வுத்துறை உள்ளிட்டோர், வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
பணப் பரிமாற்றமே நடக்கவில்லை; எப்படி சட்டவிரோதமாகும்? பழிவாங்கும் நடவடிக்கையை, மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். நுாறு நாள் வேலை திட்டத்துக்கு, தற்போது வைத்திருக்கும் பெயர், காந்தி என்ற பெயரை விட பொருத்தமான பெயரா? பெயரை நீக்கியதன் வாயிலாக, 77 ஆண்டுகளுக்கு பின், காந்தி மீண்டும் கொல்லப்பட்டுள்ளார்.
புதிய சட்டத்தின்படி, மத்திய அரசு எந்தெந்த மாவட்டத்தில் செயல்படுத்த சொல்கிறதோ, அங்கு மட்டும் தான் செ யல்படுத்த முடியும். இந்த 100 நாள் வேலை திட்டத்தை, 12 கோடி பேர் நம்பி இருந்தனர். இப்போது அந்த நிலை இல்லை. இந்த ச ட்டத்தை ரத்து செய்யும் வரை, காங்கிரஸ் போராடும்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வாயிலாக, 66 லட்சம் பேர் காணாமல் போனவர்களாக நீக்கப்பட்டுள்ளனர். அதற்காக தான் எல்லோரும் கண்டனம் தெரிவித்துள்ளோம். ஆனால், அ.தி.மு.க., மட்டும், அக்கட்சியின் முதலாளி பா.ஜ., சொ ல்வதை ஆதரிக்கிறது. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

