அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை!
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை!
UPDATED : ஜன 03, 2025 05:14 PM
ADDED : ஜன 03, 2025 09:13 AM

வேலூர்: வேலுார் மாவட்டம் பள்ளிக்குப்பம் நடு மோட்டூர் பகுதியில் உள்ள தி.மு.க., நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல், காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது வேலூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
அப்போது, கதிர் ஆனந்துக்கு நெருக்கமான தி.மு.க., பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் தாமோதரன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கதிர் ஆனந்த் வாக்காளர்களுக்கு ரூ.11 கோடி கொடுப்பதற்காக, இவர் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில், இன்று (ஜன.,03) வேலுார் மாவட்டம் பள்ளிக்குப்பம் நடு மோட்டூர் பகுதியில் உள்ள தி.மு.க., நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மூன்று கார்களில், ஆறு அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு உடன் சோதனை நடத்தினர்.
அதேபோல், காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் மற்றும் தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டு இருந்ததால், வெளியே 4 மணி நேரமாக காத்திருந்தனர். துணை மேயர் சாவி கொண்டு வந்து கொடுத்ததால், 6 மணி நேர காத்திருப்புக்கு பிறகு அமலாக்கத்துறையினர் சோதனையை துவக்கினர்.