எண்ணூர் விரைவுச் சாலை விரைவில் புத்துயிர் பெறும் : சபாநாயகர் பேச்சு
எண்ணூர் விரைவுச் சாலை விரைவில் புத்துயிர் பெறும் : சபாநாயகர் பேச்சு
UPDATED : ஜூலை 28, 2011 03:01 AM
ADDED : ஜூலை 27, 2011 09:44 PM

சென்னை : ''எண்ணூர் விரைவு சாலை ஓராண்டிற்குள் ஓ.எம்.ஆர்., சாலை போல மாற்றப்படும்,'' என்று, சபாநாயகர் ஜெயகுமார் பேசினார்.
டாக்டர் அகர்வால் குழுமத்தின் 47வது கண் மருத்துவமனை புதுவண்ணாரப் பேட்டையில் நேற்று துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, எம்.எல்.ஏ., வெற்றிவேல், மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அமர் அகர்வால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவமனையை திறந்து வைத்த தமிழக சட்ட சபை சபாநாயகர் ஜெயகுமார் பேசியதாவது: மத்திய சென்னையில் செயல்பட்டு வந்த அகர்வால் மருத்துவமனை, வடசென்னையிலும் துவக்கப்பட்டதை பெருமையுடன் வரவேற்கிறேன். ஒரு காலத்தில், ஆட்டோ ஓட்டுனர்கள் கூட இப்பகுதிக்கு வரத் தயங்குவர். இப்போதோ பாரம்பரியமிக்க புகழ் பெற்ற கண் மருத்துவமனை துவக்கப்பட்டதற்கு, நாம் எல்லோரும், டாக்டர் அமர் அகர்வாலுக்கு நன்றி கூற வேண்டும்.
கண் மருத்துவத்தில், 54 ஆண்டுகளாக சாதனை புரிந்து வருகின்றனர். மேலும் ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்ததற்காக, மத்திய அரசின் பல விருதுகளை பெற்றுள்ளது. நெரிசலான இடத்தில் மருத்துவமனையை துவக்கி விட்டோமே என, டாக்டர் அகர்வால் கவலைப்பட தேவையில்லை. முதல்வர் உத்தரவின்படி, எண்ணுர் விரைவு சாலை, ஓராண்டிற்குள் ஓம்.எம்.ஆர்., சாலை போல மாற்றப்படும். பெற்றோரின் வழியில் நிலை தவறாமல் செல்லும், டாக்டர் அமர் அகர்வாலுக்கு வட சென்னை மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.

