பேச்சு, பேட்டி, அறிக்கை: 'இ.பி.எஸ்., ஆட்டம் முடிவுக்கு வரும்'
பேச்சு, பேட்டி, அறிக்கை: 'இ.பி.எஸ்., ஆட்டம் முடிவுக்கு வரும்'
ADDED : பிப் 14, 2024 12:30 AM

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேச்சு:
ஜெயலலிதா மறைவுக்கு பின், இ.பி.எஸ்., கொள்ளையடித்த பணத்தை வைத்து, அ.ம.மு.க.,வையும், தினகரனையும் அழித்து, அரசியல் ரீதியாக ஒழித்து விடலாம் எனவும், பல நிர்வாகிகளை ஆசைகாட்டி விலைக்கு வாங்கி விடலாம் எனவும் நினைத்தார். உங்களுக்கு பதவி கொடுத்து, முதல்வர் சீட்டில் அமர வைத்தவர்களுக்கு துரோகம் செய்தவர் நீங்கள். துரோகத்தை தவிர உங்களுக்கு என்ன தெரியும். உங்கள் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தலாக, இந்த லோக்சபா தேர்தல் இருக்கும்.
இ.பி.எஸ்.,சிடம் இருப்பது கொள்ளை அடித்த பணம் என்றால், அவர், 'அடிக்கும்' வரை வேடிக்கை பார்த்தவங்க யார் என்ற கேள்வி வருதே!
அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி செயலர் ராஜ்சத்யன் அறிக்கை:
'கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் கட்டுமான பணிகள், ஏப்ரலில் தான் நிறைவு பெறும்' என, அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், பிறகு எதற்காக எந்தவித திட்டமிடலுமின்றி, எடுத்தோம் கவிழ்த்தோம் என, ஜனவரி மாதம் திறந்தீர்கள்? போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் சகோதரர் அல்லது உறவினர் யாரேனும், இத்தனை சிரமத்திற்கு ஆளாகி இருந்தால், என்ன செய்திருப்பீர்கள்.
அமைச்சரின் சகோதரர், உறவினர்கள், அரசு பஸ்சில் பயணிக்க வேண்டிய அவசியமே வராதே!
தமிழக காங்., - எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் அறிக்கை:
தமிழகத்தில் காதலர் தினத்தை எதிர்ப்பதற்கு ஜாதி பின்னணி முக்கிய காரணமாக இருக்கிறது. மதம், ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டால், பழமையில் ஊறிப்போனவர்களுக்கு வலிக்கிறது; இதனால் தான், காதலர் தினத்தை எதிர்க்கின்றனர்.
இன்றைக்கு காதலர் தினத்தை, உங்க கட்சி சார்பில் கோலாகலமா கொண்டாடுங்க... லோக்சபா தேர்தல்ல, காதல் ஜோடிகள் ஓட்டுகளை அள்ளிடலாம்!
தமிழக காங்., பொதுக்குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் அறிக்கை:
தஞ்சாவூர், மயிலாடுதுறை லோக்சபா தொகுதிகளில், காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதி வாழ் மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்க ஒரு எம்.பி., கூட காங்கிரசுக்கு இல்லை என்ற வருத்தம், அக்கட்சி தொண்டர்களிடம் நீண்ட காலமாக உள்ளது.

