நெல்லையில் இபிஎஸ் - நயினார் நாகேந்திரன் ஆலோசனை: விருந்திலும் பங்கேற்பு
நெல்லையில் இபிஎஸ் - நயினார் நாகேந்திரன் ஆலோசனை: விருந்திலும் பங்கேற்பு
ADDED : ஆக 03, 2025 09:36 PM

திருநெல்வேலி: நெல்லை சென்றுள்ள அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ், நயினார் நாகேந்திரனை, அவரது வீட்டில் சந்தித்து தனியாக ஆலோசனை நடத்தினார்.
அதிமுக -பாஜ இடையே கடந்த ஏப்ரல் மாதம் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள நெருடல் மற்றும் முரண்பாடுகளை களையும் விதமாக , 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், தமிழகம் முழுதும் பிரசார பயணம் மேற்கொள்ளும் இபிஎஸ்- ஐ தன் வீட்டுக்கு வரவழைத்து விருந்து வைக்க முடிவெடுத்து, அதற்கான ஏற்பாடுகளை செய்தார் தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன். இதனை இபிஎஸ் ஏற்றுக்கொண்டார்.
நேற்று முன்தினம் கோவில்பட்டியில் நடந்த பிரசார பயணத்திலும் நயினார் நாகேந்திரன் பங்கேற்று பேசினார்.
இந்நிலையில், இன்று இரவு இபிஎஸ் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு சென்றார். அங்கு மாடியில் உள்ள தனியறையில் இருவரும் தனியே ஆலோசனை நடத்தினர். கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்து நடத்தப்பட்டது. இதில் பாஜக முக்கிய தலைவர்கள் தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் முருகன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

