பாஜ எழுதி கொடுப்பதை அதிமுக அறிக்கையாக வெளியிடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
பாஜ எழுதி கொடுப்பதை அதிமுக அறிக்கையாக வெளியிடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
UPDATED : டிச 29, 2025 07:21 PM
ADDED : டிச 29, 2025 07:18 PM

பல்லடம்: '' பாஜ எழுதி கொடுப்பதை, அதிமுக 'லெட்டர்பேடில்' இபிஎஸ் எழுதித் தருகிறார்,'' என முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற பெயரில் தி.மு.க., மேற்கு மண்டல மகளிரணி மாநாடு இன்று நடந்தது.
உறுதி
இம்மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பெண்கள் சக்தியால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர உள்ளது.தேர்தல் அறிக்கை தான் திமுகவின் கதாநாயகன். அதை தயாரிக்கும் பொறுப்பை கனிமொழி ஏற்றுக்கொண்டுள்ளார்.வரும் சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெறப்போகிறோம். அது உறுதி. மகளிர் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். தமிழகம் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்கிறது. துவக்க கால திராவிட இயக்கத்தில் பெண்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர்.
திராவிட இயக்கம்
திராவிட இயக்கத்தினால், பெண்கள் வளர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் பெண்கள் ஆண்டிராய்டு மொபைல் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டதாக செய்தி வந்தது. ஆனால், தமிழகத்தில் ஐபோன்களை பெண்கள் உற்பத்தி செய்கின்றனர். பெண்களுக்கு சொத்துரிமை அளித்தது திமுக. பெண்கள் சமையல் அறையை தாண்டி செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதித்தனர். ஆனால், இதனை உடைத்தது திராவிட இயக்கம்.
லட்சியம்
உலகில் பல நாடுகளில் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை கருணாநிதி கொண்டு வந்தார்.தமிழகத்தில் இப்போது பெண் மேயர்கள் தான் அதிகம். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு கிடைத்த அதிக பிரதிநிதித்துவம் போல், சட்டசபையிலும், பார்லிமென்டிலும் கிடைக்க வேண்டும். இதுதான் திமுகவின் லட்சியம்.இதற்காக போராடுகிறோம்.
விருப்பமில்லை
தேவையில்லாத நடைமுறைகளோடு 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீட்டை பாஜ அரசு கொண்டு வந்துள்ளது. எப்போது செயல்படுத்தப்படும் எனத் தெரியாது. பெண்களுக்கு சட்டசபையிலும், பார்லிமென்டிலும் அங்கீகாரம் பெறுவதை பாஜ விரும்பவில்லை. இதனால் காலம் கடத்துகின்றனர்.திமுக அரசு பெண்களுக்கான ஆட்சி. பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த கூட்டத்தில் எனது தாயார் போலவும், சகோதரிகள் போலவும், மகளை போலவும் நிறைய பேர் உள்ளனர். உங்களுக்கு என்ன தேவை என்ன பார்த்து பார்த்து கொண்டு வந்துள்ளோம்.
அதிகரிப்பு
மகளிர் உரிமைத்தொகையால் பல பெண்களுக்கு, சுயமரியாதையை தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு தான் முதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தினோம்.விடியல் பயணத்தால் பெண்கள் பயணம் செய்வது அதிகரித்துள்ளது. புதிய வாய்ப்புகளை தேடி பெண்கள் ஏராளமானோர் விடியல் பயணம் மேற்கொள்கின்றனர்.7 லட்சம் மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது. இதனால், பெண்கள் கல்வி பெறுவது அதிகரித்துள்ளது.புதுமைப்பெண் திட்டத்தில் மகளோடு, மகனோடு கல்லூரி செல்லும் பெண்ணை பார்த்து இருக்கிறேன்.மகளிர் சுய உதவிக்குழு கருணாநிதி ஆட்சியில் துவங்கப்பட்டது. திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி.ஏன் பெண்களுக்கு முன்னுரிமை என சிலருக்கு சந்தேகம் வரும்.பெண்கள் முன்னேறினால் சமூகம் முன்னேறும் என இவ்வளவு செய்கிறோம்.
சந்தேகம்
ஆனால், பாஜ அரசு, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை இழுத்து மூடியுள்ளது.கடந்த 4 ஆண்டுகளில் 100 நாள் வேலை திட்டத்தில் பயனடைந்தவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள்.பெண்களுக்கு வாழ்வளித்த திட்டத்தை நிறுத்தி உள்ளனர். இதனால் கிராமப்புற பொருளாதாரம் அடிவாங்கப்போகிறது.இதற்கு ஒத்து ஊதுவது அதிமுக பழனிசாமி. ஆண்டுக்கு 47 நாள் தான் வேலை தான் கொடுத்தனர். அதுவும் கொடுக்கப்போவதில்லை. மாநில அரசுகளிடம் நிதியை பகிர்ந்து கொடுத்துள்ளனர். பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனால், வேலைநாட்கள் கிடைக்குமா என சந்தேகம். பாஜவின் நடவடிக்கை பெண்களுக்கு எதிரானது. சட்டத்தை படித்து பார்த்தால் தானே இபிஎஸ்க்கு தெரியும். கமலாலயத்தில் எழுதி தரும் அறிக்கையை அதிமுக லெட்டர் பேடில் எழுதி கொடுக்கிறார்.
பெண்களுக்கான ஆட்சி
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது.திராவிட மாடல் 2.0 ஆட்சியில் பெண்களுக்கான திட்டங்களை விரிவுபடுத்தப் போகிறாம். ஆண்கள், வாசல் வரைதான் பிரசாரம் செய்ய வேண்டும். ஆனால், பெண்கள், வீட்டில் சமையல் அறை வரை செல்ல முடியும். பெண்களின் மனதிற்குள் செல்ல முடியும். இதனை பயன்படுத்தி நமதுதிட்டங்களை பெண்களிடம் சொல்ல வேண்டும்.நான் கனிமொழிக்கு மட்டுமல்ல உங்களுக்கும் அண்ணன்தான்.அடுத்த அமையும் திராவிட மாடல் 2.0 ஆட்சி பெண்களுக்கானதாக தான் இருக்கும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

