பேச்சு சுதந்திரத்தில் தலையிடுவதற்கு சமம்: சினிமா விமர்சனத்துக்கு தடை கோரிய வழக்கில் சென்னை ஐகோர்ட் கருத்து
பேச்சு சுதந்திரத்தில் தலையிடுவதற்கு சமம்: சினிமா விமர்சனத்துக்கு தடை கோரிய வழக்கில் சென்னை ஐகோர்ட் கருத்து
ADDED : ஜூன் 26, 2025 09:40 PM

சென்னை: '' ஆன்லைன் சினிமா விமர்சனங்களை தடுப்பது என்பது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமையில் தலையிடுவதற்கு சமம்,'' என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.
புதிதாக வெளியாகும் சினிமா படங்கள் குறித்து 3 நாட்கள் ஆன்லைனில் விமர்சனம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம்(Tamil Film Active Producers Association (TFAPA)) சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், புதிதாக வெளியாகும் படங்கள் குறித்து மீடியாக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வது என்பது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை. இதனால், நேர்மறையான விமர்சனங்களை மட்டும் தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கக்கூடாது. இதனை தடை செய்வது என்பது, பேச்சு சுதந்திரத்துக்கான உரிமையில் தலையிடுவதற்கு சமம் ஆகும்.
இதனை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புரிந்து கொள்ள வேண்டும். மனுதாரர்கள் கேட்டுள்ள நிவாரணம் ஏற்க முடியாதது. அதனை நீதிமன்றம் வழங்காது.
சினிமா தியேட்டர்களுக்கு சவாலாக ஓடிடி தளங்கள் உருவாகி உள்ளதை தயாரிப்பாளர்கள் தங்களுக்கு தோதாக மறந்துவிட்டது போல் தெரிகிறது. புதிய படங்களை வீடுகளில் இருந்து தங்கள் வசதிக்கு ஏற்றபடி பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மெதுவாக உயர்ந்து வருகிறது.
நீதிபதிகள் குறித்து எதிர்மறையான விமர்சனம் வைக்கப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். சமூக வலைதளங்களில் என்னையும்(நீதிபதி) விமர்சனம் செய்வதை பார்க்கலாம். அனைத்தையும் தடுக்க முடியாது. இன்று யாராலும் எதை குறித்தும் விமர்சனம் செய்ய முடியும். இதனை கட்டுப்படுத்த முடியாது.
இங்கு ஒருவரை தடுத்து நிறுத்தினால், மற்றொருவர் வெளிநாட்டில் இருந்து செய்வார். அப்போது என்ன செய்வீர்கள்.
தயாரிப்பாளர்கள் கோரிக்கைப்படி உத்தரவு போட்டால், அதனை எப்படி செயல்படுத்துவீர்கள். அமல்படுத்த முடியாத உத்தரவை பிறப்பிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. இன்றைய உலகம் சமூக வலைதளங்களின் பிடியில் உள்ளது. சமூக வலைதளங்களில் விமர்சனத்தில் இருந்து தனி நபர்கள்/ அமைப்புகள்/ எந்த நாடும் தப்பிக்க முடியாது.
சமூக வலைதள காலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஒரே வழி. மக்கள், படங்களை பார்த்த பிறகே அது குறித்து முடிவு செய்ய வேண்டும். படங்கள் குறித்து மற்றவர்கள் சொல்வதை வைத்து முடிவு செய்யக்கூடாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.