ADDED : டிச 14, 2024 07:02 PM
ஈரோடு:ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ., இளங்கோவன், கடந்த சில ஆண்டாக மூச்சு திணறல், நுரையீரல் தொற்றால் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த தீபாவளிக்கு பின் உடல் நலம் பாதித்து, நவ., 13ல் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். சென்னையில் அவரது உடல் இன்று தகனம் செய்யப்படும் நிலையில், ஈரோடு திருமகன் ஈவெரா சாலையில் உள்ள அவரது வீட்டில் காங்., கட்சியினர் கூடினர். அவரது உருவப்படத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள், மக்கள் மாலை அணிவித்து சென்றனர்.
சென்னையில் அவரது உடல் உள்ளதால், வி.ஐ.பி.,க்கள் அங்கு சென்றதால், ஈரோடு வீடும், அப்பகுதியும் சோகமாக காணப்பட்டது. அப்பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
கடந்த, 2021 சட்டசபை தேர்தலில் இளங்கோவன் மகன் திருமகன் ஈ.வெ.ரா., 8,523 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். உடல் நலக்குறைவால், 2023 ஜன., 4ல் அவர் இறந்ததும், பிப்., 27ல் இடைத்தேர்தல் நடந்தது. இதில் காங்., சார்பில் போட்டியிட்ட இளங்கோவன், 66,233 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். தற்போது அவரது இறப்பால் தொகுதி மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கிறது.