ADDED : பிப் 08, 2025 06:59 PM
தஞ்சாவூர்:தஞ்சாவூரில் அமைச்சர் மெய்யநாதன் அளித்த பேட்டி:
ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும். கடந்த 2021ம் ஆண்டு, மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திருக்க வேண்டும். ஆனால், மூன்று ஆண்டுகளை கடத்தும் இதுவரை கணக்கெடுப்பு மத்திய அரசால் நடத்தப்படவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்தின் மூலம் தான், ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முடியும். மாநில அரசு எடுக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்புகளை வைத்து, ஒன்றுமே செய்ய முடியாது. நீதிமன்றங்கள், அந்த மாதிரி எடுக்கப்படும் கணக்கெடுப்பை தள்ளுபடி செய்கின்றன.
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள், தமிழக முதல்வர் செயல்படுத்தும் திட்டங்களை அப்படியே பின்பற்றி வரும் நிலைக்கு தமிழகத்தை முதல்வர் உயர்த்தியுள்ளார். இதை வைத்துத்தான், 'தமிழகத்தில் பல்வேறு துறைகள் சிறப்பாக செயல்படுகிறது' என, மத்திய அரசு பாராட்டியுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் என்பது, முதல்வர் ஸ்டாலின் நான்கு ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம். தி.மு.க., ஆட்சிக்கு சான்று.
இவ்வாறு அவர் கூறினார்.

