மத்திய அரசு அனுமதி தாமதம்: தள்ளிப்போகும் அகழாய்வுகள்
மத்திய அரசு அனுமதி தாமதம்: தள்ளிப்போகும் அகழாய்வுகள்
ADDED : பிப் 06, 2024 06:26 AM

சென்னை: மத்திய அரசு அனுமதி வழங்காததால், தமிழகத்தில் அகழாய்வு தேதி தள்ளிப் போகிறது.
தமிழகத்தில் கடந்தாண்டு எட்டு இடங்களில், தமிழக தொல்லியல் துறை அகழாய்வு செய்தது. அதற்கான ஆவணங்கள் தயாரிக்கும் பணியில், தற்போது அகழாய்வு இயக்குனர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஏற்கனவே அகழாய்வு செய்த சிவகங்கை மாவட்டம் கீழடி, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட நான்கு இடங்கள்.
புதிதாக தென்காசி மாவட்டம் திருமலாபுரம், திருப்பூர் மாவட்டம் கொண்டல் நகர், கடலுார் மாவட்டம் மருங்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னானுார் ஆகிய இடங்களிலும், இந்தாண்டு அகழாய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறை அனுமதி கோரியது.
மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியமான, 'காபா' அமைப்பு, இன்னும் அதற்கான அனுமதி வழங்கவில்லை. இதனால், கடந்த மாதம் துவங்க வேண்டிய அகழாய்வுப் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை.
இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறையினர் கூறியதாவது:
மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியமான 'காபா', தொல்லியல் அதிகாரிகளுடன் ஆலோசித்து தான், அனைத்து மாநிலங்களுக்கும் அகழாய்வு அனுமதியை வழங்குகிறது. ஆனால், அந்த ஆய்வுக் கூட்டம் இதுவரை நடக்கவில்லை.
அதனால்தான், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
இவ்வாறு கூறினர்.
இதுகுறித்து, தமிழக தொல்லியல் துறையினர் கூறுகையில், 'ஜனவரி, பிப்ரவரியில் துவக்கினால் தான், அக்டோபர் வரை அகழாய்வு செய்து, நவம்பர், டிசம்பரில் ஆவணப்படுத்தும் பணியை செய்ய முடியும்.
'அனுமதி கிடைக்க தாமதமாவதால், மழைக்காலத்தில் பாதிப்பு அதிகமாக இருக்கும்' என்றனர்.

