மின் விபத்துகளுக்கு இனிமேல் செயற்பொறியாளரே பொறுப்பு வாரியம் எச்சரிக்கை
மின் விபத்துகளுக்கு இனிமேல் செயற்பொறியாளரே பொறுப்பு வாரியம் எச்சரிக்கை
ADDED : செப் 17, 2026 11:00 PM
சென்னை: 'மின் விபத்து ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு உட்பட்ட உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளரே பொறுப்பேற்க நேரிடும்' என, மின் வாரியம் எச்சரித்துள்ளது.
அடுத்த மாதம் வட கிழக்கு பருவ மழை சீசன் தொடங்குகிறது.
அந்த காலத்தில் மின் விபத்து, மின் தடை ஏற்படுவதை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக, தலைமை செயலர் சாய்குமார், மின் வாரிய உயரதிகாரிகளுடன் சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார்.
உத்தரவு
அதில், தண்ணீர் தேங்கும் தாழ்வான இடங்களில் உள்ள மின் வினியோக பெட்டிகளின் உயரத்தை அதிகரிப்பது, துணை மின் நிலையங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர் அருகில் உள்ள மரக்கிளைகளை உடனே அகற்றுவது, சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுமாறு, மின் வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது.
அதன் அடிப்படையில், வரும், 30ம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்குமாறு, பிரிவு அலுவலக பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மின் விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட உதவி செயற் பொறியாளர், செயற் பொறியாளரே பொறுப்பேற்க வேண்டும் எனவும், எச்சரித்துள்ளது.
'சஸ்பெண்ட்'
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மின் விபத்தால் மனிதர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால், அந்த இடத்திற்கு உட்பட்ட அலுவலக கள பணியாளர், உதவி பொறியாளர் மீது மட்டுமே, 'சஸ்பெண்ட்' நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தற்போது, சீரமைப்பு பணிகளில் அலட்சியம் காட்ட கூடாது என்பதற்காக, மின் விபத்து ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளரே பொறுப்பேற்க வேண்டும் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
