சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து; தொழிலாளிகள் 3 பேர் பலி
சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து; தொழிலாளிகள் 3 பேர் பலி
UPDATED : ஏப் 26, 2025 09:39 PM
ADDED : ஏப் 26, 2025 11:34 AM

சிவகாசி: சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், தொழிலாளிகள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் உள்ளன. 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 26) திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. மருந்து கலவையில் உராய்வு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திலேயே தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மனைவி மாரியம்மாள்(51), கலைசெல்வி(38) மற்றும் விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியை சேர்ந்த ராமர் மனைவி திருவாய்மொழி(45) ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
நிவாரணம் அறிவிப்பு
பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
2 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை மேலாளர் உள்ளிட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.