சொத்து பத்திர நகல்களை உடனுக்குடன் பெற வசதி பதிவுத்துறை நடவடிக்கை
சொத்து பத்திர நகல்களை உடனுக்குடன் பெற வசதி பதிவுத்துறை நடவடிக்கை
ADDED : பிப் 16, 2026 01:25 AM

சென்னை: சொத்து பத்திரங்களின் நகல்களை, 'ஆன்லைன்' முறையில், உடனுக்குடன் பெறுவதற்கான வசதியை பதிவுத்துறை அறிமுகப் படுத்தி உள்ளது.
தமிழகத்தில், 590 சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக, பத்திரப்பதிவுகள் நடக்கின்றன. இந்த பணிகளை விரைவுபடுத்த, பல்வேறு புதிய வசதிகளை பதிவுத்துறை அறிமுகப்படுத்தி வருகிறது.
சொத்தின் அசல் பத்திரத்தை தொலைத்தவர்கள் அல்லது அதை சரிபார்க்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள், அதன் நகல் கேட்டு, சார் - பதிவாளர் அலுவலகத்தை அணுகுவர்.
அங்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தினால், நகல் கிடைக்க சில வாரங்கள் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. இந்த காத்திருப்பு முறைக்கு பதிவுத்துறை முடிவு கட்டியுள்ளது.
இது குறித்து, பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
சொத்து பத்திரத்தின் நகல் தேவைப்படுவோர், தற்போது, 'ஆன்லைன்' முறையில், விண்ணப்பித்தால் போதும். அதில் தெரிவிக்கப்படும் கட்டணத்தை செலுத்திய சில நிமிடங்களில், அவர்களின், 'இ - மெயில்' முகவரிக்கு, ஆவணத்தின் நகல், 'பி.டி.எப்.,' வடிவில் வந்துவிடும்.
சார் - பதிவாளர் அலுவலக அதிகாரிகளின் தலையீடு இல்லாமல், தானியங்கி முறையில் இந்த சேவை செயல்படும் நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்களின் விண்ணப்பத்தை யாரும் நிறுத்த முடியாது.
முதற்கட்டமாக, 1975ம் ஆண்டு முதல் தற்போது வரை பதிவான பத்திரங்களின் நகல் ஆவணங்களை உடனடியாக பெறலாம். இதற்கு, வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக 400 ரூபாய் வசூலிக்கப்படும்.
கடந்த 1975க்கு முந்தைய ஆண்டுகளின் பத்திரங்களுக்கும், இந்த வசதி விரைவில் விரிவு படுத்தப்படும்.
அதுவரை, பழைய ஆவணங்கள் பெற விரும்புவோர், 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பிக்கலாம். ஆனால், அந்த விண்ணப்பம் அதிகாரிகள் நடவடிக்கைக்கு செல்லும்.
புதிதாக சொத்து வாங்குவோர், அசல் ஆவணங்களின் உண்மை தன்மையை அறிய, புதிய வசதியை பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

