எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பத்திரப்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகம்
எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பத்திரப்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகம்
ADDED : ஜன 19, 2026 04:19 AM

சென்னை: சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல், எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பத்திரப்பதிவு செய்யும் வகையில், 18 வகையான புதிய சேவைகளை பதிவுத்துறை அறிமுகப்படுத்த உள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை, சொத்து வாங்குவோர், அதற்கான பத்திரப்பதிவை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் அலுவலகம் செல்வது தற்போது கட்டாயமாக உள்ளது. இதற்கான நடைமுறையில் பல்வேறு பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
சோதனை வெற்றி
இந்நிலையில், பதிவுத்துறையில் தற்போது பயன்பாட்டில் உள்ள, 'ஸ்டார் 2.0' மென்பொருளுக்கு பதிலாக, 'ஸ்டார் 3.0' என்ற புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என, தமிழக அரசு 2021ல் அறிவித்தது.
இதற்கான புதிய மென்பொருள், நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான சோதனைகள் வெற்றி அடைந்துள்ளன. இதையடுத்து, பதிவுத்துறை இணையதளத்தில், 'ஸ்டார் 3.0' மென்பொருளை சேர்க்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
சொத்து வாங்கும் மக்கள், எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும், பத்திரப்பதிவை மேற்கொள்ளும் வகையில் 18 புதிய வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளன. டிஜிட்டல் கையெழுத்திட்டு, சொத்து பத்திரங்கள் டிஜிட்டல் முறையில் மக்களுக்கு கிடைக்கும்.
காகிதமில்லா அலுவலகம் என்பதுடன், கட்டணங்களை க்யு.ஆர்., குறியீடு முறையில் செலுத்தும் வசதிகளும், இதில் இடம் பெற்றுள்ளன. இதனால், பத்திரப்பதிவு பணிகள் மிகவும் எளிதானதாகிவிடும்.
தொழில்நுட்பம்
சென்னை, கோவை உள்ளிட்ட சில மண்டலங்களில், கடந்த வாரம் இந்த மென்பொருளை பயன்படுத்தி பத்திரப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய மென்பொருள் தொழில்நுட்ப ரீதியாக அமலுக்கு வந்தாலும், முதல்வர், அமைச்சர்கள் முன்னிலையில் இதற்கான துவக்க விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என, பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல்வர், அமைச்சர் ஆகியோரின் நேரம் கிடைத்ததும், 'ஸ்டார் 3.0' மென்பொருள் பயன்பாட்டுக்கான துவக்க விழா நடத்தப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

