ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் பெயரில் போலி கணக்கு; நெட்டிசன்கள் அதிர்ச்சி!
ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் பெயரில் போலி கணக்கு; நெட்டிசன்கள் அதிர்ச்சி!
UPDATED : நவ 25, 2024 11:34 AM
ADDED : நவ 25, 2024 11:19 AM

சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் பெயரில் போலி சமூகவலைதளப் பக்க கணக்கு தொடங்கி, மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் எப்படி வளர்கிறதோ, அதற்கேற்றவாறு, புதுசு புதுசாக சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சமூகவலைதளங்களில் போலி கணக்குகளை தொடங்கி, உதவி கேட்பது போல நடித்து, பணம் பறிப்பது அதிகளவில் நடந்து வருகிறது. இது தொடர்பான புகார்களும் சைபர் கிரைமில் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனின் போட்டோ மற்றும் பெயரை பயன்படுத்தி போலி கணக்கு தொடங்கி, மோசடியில் ஈடுபட மர்ம கும்பல் முயன்றுள்ளது.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராதாகிருஷ்ணனின் பெயரிலான அந்த போலி கணக்கில் இருந்து, சி.ஆர்.பி.எப்.,க்கு பணம் அளிக்குமாறு, அவரது நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. அதோடு, QR கோடு போட்டோவை அனுப்பி ஜிபேவில் பணம் அனுப்புமாறு கேட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த ராதாகிருஷ்ணன், தனது பெயரில் போலி கணக்கு தொடங்கி, பணம் பறிக்கும் முயற்சி நடப்பதாகவும், இந்தக் கணக்குகளில் இருந்து ப்ரண்ட் ரெக்வஸ்ட் வந்தால்,அதனை யாரும் ஏற்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், இது பற்றி சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்துள்ளார். தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பெயரிலேயே மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.