124 பேருக்கு போலி பிறப்பு சான்று; தற்காலி்க ஊழியர் சிறையில் அடைப்பு
124 பேருக்கு போலி பிறப்பு சான்று; தற்காலி்க ஊழியர் சிறையில் அடைப்பு
ADDED : பிப் 17, 2025 07:54 AM
பெரம்பலுார் : பெரம்பலுாரில், 124 பேருக்கு போலி பிறப்பு சான்றிதழ் வழங்கிய தஞ்சை நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரம்பலுார் மாவட்டம், கிருஷ்ணாபுரம் வட்டார தலைமை அரசு மருத்துவமனையின் பிறப்பு சான்றிதழ் வழங்கும் பிரிவின், கடவுச்சொல்லை பயன்படுத்தி, இங்கு பிறக்காத குழந்தைகளுக்கு, போலியாக பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, கிருஷ்ணாபுரம் சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ், பெரம்பலுார் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இதில், தஞ்சாவூர் மாவட்டம், சோழபுரம் கிராமத்தை சேர்ந்த முகமது பரித், 39, பலரிடமும் ஆயிரக்கணக்கில் பணம் பெற்று, போலி பிறப்பு சான்றிதழ் வழங்கியது தெரியவந்தது.
முகமது பரித் சோழவரம் வி.ஏ.ஓ., அலுவலக தினக்கூலி ஊழியராக வேலை பார்த்தார். இவரிடம், குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் தம்பதியர், தங்கள் பெயரை பெற்றோராக கொண்டு, இவர் வாயிலாக பிறப்பு சான்று பெற்றுள்ளனர்.
இவர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த, 124 பேருக்கு போலி பிறப்பு சான்றிதழ் வழங்கியது தெரியவந்தது. முகமது பரித்தை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.
சான்றிதழ் பெற்றவர்கள், புரோக்கர்கள் என, இருபதுக்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த மோசடிக்கு பெரம்பலுார் மாவட்ட சுகாதார துறையில் பணியாற்றும் சில அலுவலர்கள் உடந்தையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. அது குறித்தும் விசாரணை நடக்கிறது.