ADDED : டிச 28, 2024 07:43 PM
சென்னை:தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன் அறிக்கை:
அண்ணா பல்கலையின் பாலியல் கொடூர விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு போராடிய அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் அமைப்பின் மாநில செயலர் யுவராஜ் மற்றும் அலுவலக செயலர் ஸ்ரீதர் ஆகியோரை நள்ளிரவில் கைது செய்துள்ளது திராவிட மாடல் போலீஸ்.
குற்றம் செய்தவர்கள் அனைவரையும் கைது செய்யாமல் காலம் கடத்தும் போலீஸ், அதை வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்களை கைது செய்வது என்ன மாதிரியான நடவடிக்கை? இது தான், திராவிட மாடல் போலீசின் செயல்பாடு என்றாகி விட்டது.
இப்படி கைது செய்த ஏ.பி.வி.பி., நிர்வாகிகளை, உடனடியாக நீதிபதி முன் நிறுத்தவில்லை. பல மணி நேரம், அவர்களை அலைகழித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் சுரண்டல் விவகாரம் நாடு முழுதும், தி.மு.க., அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலை சம்பவத்துக்குப் பின், தமிழகத்தில் பெண் பிள்ளைகள் பெற்றவர் அனைவரும் ஒருவிதமான அச்சத்திலும் வேதனையிலும் உள்ளனர்.
எத்தனை நாளைக்குத்தான் நீதிகேட்டு போராடுவோரையே பொய் வழக்கில் தமிழக போலீஸ் கைது செய்யும்?
அண்ணா பல்கலையில் தி.மு.க., பிரமுகரால் பாதிக்கப்பட்ட மாணவிக்காக, யாரும் குரல் எழுப்பக்கூடாது என அச்சமூட்டுவதற்காகவே போலீசார் ஏ.பி.வி.பி.,யினரை கைது செய்துள்ளனர். இந்த மோசமான செயலை இனியாவது நிறுத்த வேண்டும். பொய் வழக்கை போலீஸ் ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

