கல்லூரி மாணவி தற்கொலை திமுக இளைஞர் அணி நிர்வாகி மீது குடும்பத்தினர் புகார் : போலீசார் விசாரணை
கல்லூரி மாணவி தற்கொலை திமுக இளைஞர் அணி நிர்வாகி மீது குடும்பத்தினர் புகார் : போலீசார் விசாரணை
ADDED : ஜன 05, 2024 10:56 PM
கோத்தகிரி: கோத்தகிரியில் தற்கொலை செய்து கொண்ட கல்லுாரி மாணவியின் இறப்புக்கு, 'டார்ச்சர்' தான் காரணம்,' என, குற்றம் சாட்டி பெற்றோர்; உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கல்பனா காட்டேஜ் பகுதியை சேர்ந்த 'வெல்டிங்' தொழிலாளி கணேஷ் மூர்த்தி. இவரது மனைவி மல்லிகா. இவர்களது இளைய மகள் ஸ்ரீநிதி, 21. கோவையில் ஒரு தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
புத்தாண்டு விடுமுறைக்கு கோத்தகிரிக்கு வந்த ஸ்ரீநிதி, கடந்த, 2ம் தேதி பெற்றோர் பணிக்கு சென்ற நிலையில், துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. தற்கொலை என, வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், மாணவியின் தந்தை உட்பட, 30க்கும் மேற்பட்டோர் நேற்று கோத்தகிரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, 'மாணவியின் தற்கொலைக்கு துாண்டியவர்களை கைது செய்ய வேண்டும்,' என கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கணேஷ்மூர்த்தி கூறுகையில்,'' எனது மகள் ஸ்ரீநிதி தற்கொலை செய்வதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் மறைத்து விட்டனர், கோத்தகிரி தி.மு.க., இளைஞரணி நிர்வாகி வினோத் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர், வீட்டின் கதவை தட்டி 'டார்ச்சர்' செய்ததால் தான் தற்கொலை நடந்துள்ளது. தற்கொலைக்கு துாண்டியவர்கள்; அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, டி.எஸ்.பி., கலைச்செல்வி மற்றும் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, 'சம்பந்தப்பட்டவர்கள் குறிந்த்து விசாரணை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து உறவினர்கள் சென்றனர்.
குன்னுார் டி.எஸ்.பி., குமார் கூறுகையில்,'' கல்லுாரி மாணவி தற்கொலை சம்பவத்தில், அவரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பெயரில், தி.மு.க., இளைஞரணி நிர்வாகி வினோத் என்பவர் மீது 'தற்கொலைக்கு துாண்டுதல்' என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதை தவிர, மேலும் சிலரிடமும் விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.