காரைக்குடியில் பயங்கரம்: பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை; 3 பேர் கைது
காரைக்குடியில் பயங்கரம்: பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை; 3 பேர் கைது
UPDATED : மார் 21, 2025 04:58 PM
ADDED : மார் 21, 2025 10:59 AM

காரைக்குடி: காரைக்குடி அருகே பிரபல ரவுடியை மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழிக்கு பழியாக நடந்த இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் வைத்து, ஒரு கும்பலால் பிரபல ரவுடி ஜான் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான தாக்கம் அடங்குவதற்குள், காரைக்குடியில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் சேர்வாஊரணியைச் சேர்ந்த பிரபல ரவுடி மனோஜ். நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவர், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்து போடச் சென்றுள்ளார். அப்போது, காரில் வந்த மர்மகும்பல் மனோஜை வழிமறித்து, ஓட ஓட விரட்டி படுகொலை செய்தனர். மனோஜின் நண்பர்கள் இருவர் காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், மனோஜின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.
கைது
இச்சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான காரைக்குடி அண்ணாநகரை சேர்ந்த குருபாண்டி, விக்னேஷ் மற்றும் சக்திவேல் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு குருபாண்டியின் தந்தை லட்சுமணன் கொலைக்கு பழி வாங்க இக்கொலை சம்பவம் அரங்கேறியது தெரியவந்துள்ளது.