சிவகங்கையில் விவசாயி கொடூர கொலை: தலையை தேடும் போலீஸ்: மர்ம நபர்கள் வெறிச்செயல்
சிவகங்கையில் விவசாயி கொடூர கொலை: தலையை தேடும் போலீஸ்: மர்ம நபர்கள் வெறிச்செயல்
UPDATED : ஜூலை 20, 2025 10:08 PM
ADDED : ஜூலை 20, 2025 04:06 PM

சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டாகுடி கிராமத்தில் சோணை முத்து என்ற விவசாயியை மர்ம நபர்கள் தலையை துண்டித்து கொலை செய்தனர். தலை மற்றும் கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள நாட்டாகுடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சோனை முத்து (62). விவசாயி. சில காலமாக குடும்பத்துடன் மதுரையில் வசித்து வந்தார். நாட்டாகுடியில் உள்ள தனது நிலத்தை பார்த்துவிட்டு வருவதற்காக
சொந்த ஊருக்கு வந்தார். நிலத்தை பார்த்த பிறகு, வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார்.
பிற்பகல் 3 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து
விவசாயி சோனைமுத்துவை சரமாரி வெட்டி கொன்றது. அவருடன் அவரது நண்பர்
பாண்டி என்பவரும் இருந்தார். அவரையும் மர்ம ஆசாமிகள் சரமாரி வெட்டினர்.
சோனைமுத்துவை கொன்றபிறகுஇம் கொலையாளிகளுக்கு வெறி அடங்கவில்லை. அவரது தலையை துண்டித்து கையில் எடுத்துச் சென்றனர்.
பைக்கில் தப்பிய மர்ம கும்பல், போகும் வழியில் தலையை வீசி விட்டுச் சென்றது.
சோனை முத்துவீடு புகுந்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்ததும் போலீசார் விரைந்து சென்றனர். தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த நண்பர் பாண்டியை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சோனை முத்துவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு
அனுப்பி வைக்கப்பட்டது. அவரது தலையை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்
விவசாயி தலையை போலீஸ் தேடும் வீடியோ மற்றும் போட்டோ சிவகங்கையில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. சோனைமுத்துவின் தலையை துண்டித்து கொடூரமாக கொல்லும் அளவுக்கு என்ன முன்பகை இருந்தது? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்ட சிவபிரசாத் இன்றுபகல் 12 மணியளவில்
பதவி ஏற்றுக் கொண்டார். அடுத்த 3 மணிநேரங்களில் கொடூரமாக விவசாயி கொல்லப்பட்டுள்ளார். இந்த செய்தியை கேட்டதும் எஸ்பி சிவ பிரசாத் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, எஸ்பி சிவபிரசாத் தெரிவித்தார்.