அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகளால் பீதி; சிவகங்கை அருகே காலியானது நாட்டாகுடி கிராமம்
அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகளால் பீதி; சிவகங்கை அருகே காலியானது நாட்டாகுடி கிராமம்
ADDED : ஆக 06, 2025 07:34 AM

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், நாட்டாகுடி கிராமத்தில் தொடர் கொலைகள், அடிப்படை வசதிகள் இல்லாதது போன்றவற்றால், மக்கள் கிராமத்தை காலி செய்து வெளியூர்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மாத்துார் ஊராட்சியின் கீழ் நாட்டாகுடி, வேலாங்குளம், இலந்தங்குடி உட்பட ஐந்து கிராமங்கள் உள்ளன. இதில், நாட்டாகுடி கிராமத்தில் ஐந்து தலைமுறைகளாக 150 குடும்பத்தினர் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். உப்பாற்றில் ஓடும் வெள்ள நீர், நாட்டாகுடி கண்மாயை நிரப்பி செல்வதன் மூலம்,200 ஏக்கரில் விவசாயம் நடைபெற்றது.
மேலும், 20 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வறட்சியால், அக்கிராம மக்கள் படிப்படியாக மதுரை, சிவகங்கை போன்ற நகரங்களுக்கு குடியேறினர். எஞ்சிய 50 குடும்பங்கள் தொடர்ந்து வசித்தனர். குடிநீர், ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தருமாறு பலமுறை கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், கிராமத்தில் குற்ற சம்பவங்களும் அதிகரிக்க துவங்கின. ஒரு வயது குழந்தையின் கழுத்தை நெரித்து தந்தையே கொலை செய்து உப்பாற்றில் புதைத்தார். கிராம முக்கியஸ்தர் கணேசன் என்பவரை, ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.
ஜூலை 20 மதியம் 1:00 மணிக்கு டூ - வீலரில் வந்த 3 பேர் வீட்டிற்கு முன் அமர்ந்திருந்த விவசாய கூலி தொழிலாளி சோணைமுத்து, 62, என்பவரை கொலை செய்து, தலையை துண்டித்து சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள கண்மாயில் வீசி சென்றனர்.
ஏற்கனவே பல குடும்பங்கள் வெளியேறிய நிலையில், இந்த சம்பவத்தை அடுத்து இருந்த 10 குடும்பமும் கால்நடைகளுடன் பிற நகரங்களுக்கு சென்றுவிட்டனர். அடுத்தடுத்து அரங்கேறிய கொலைகளால் ஒரு கிராமமே காலியானது, சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சட்டசபை தேர்தல் வரஉள்ளதை அடுத்து, ஆளுங்கட்சிக்கு எதிராக பிரசாரத்தில் நாட்டாகுடி கிராம அவலத்தையும் கையில் எடுக்க எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

