ADDED : பிப் 23, 2026 06:28 AM

சென்னை: தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் இன்று(பிப்.,23) வெளியாகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை ஒட்டி வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகளை, தலைமை தேர்தல் கமிஷன் 2025ல் துவக்கியது. இதற்காக, நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை, எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடந்தது.
இதை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, 2025 அக்டோபர் மாத நிலவரப்படி, 6.41 கோடியாக இருந்த வாக்காளர்களில், 97.30 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தற்போது, 5.43 கோடி பேர் மட்டுமே பட்டியலில் உள்ளனர்.
இதை தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் செய்யவும், கடந்த 10ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பெயர் சேர்க்க 22.8 லட்சம் மனுக்கள்; பெயர் நீக்க 2 லட்சம்; திருத்தம் செய்ய 9.90 லட்சம் மனுக்கள் என, மொத்தம் 34.7 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.
அவற்றை பரிசீலித்து, இறுதி வாக்காளர் பட்டியல், இம்மாதம் 17ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. பின், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அவகாசம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, இறுதி வாக்காளர் பட்டியலை, தலைமை தேர்தல் கமிஷன் இன்று வெளியிடுகிறது. மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான கலெக்டர்கள், இன்று காலை 10:00 மணிக்கு பட்டியலை வெளியிட உள்ளனர். இதை தொடர்ந்து, மாநிலம் முழுதும் உள்ள இறுதி வாக்காளர்கள் விபரங்களை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட உள்ளார்.

