ADDED : பிப் 10, 2026 06:44 AM

சென்னை: தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில், மருத்துவமனை, அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் காவலாளிகளுக்கு, தீயணைப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியை சென்னை அசோக் நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, டி.ஜி.பி., சீமா அகர்வால் நேற்று துவக்கினார்.
அப்போது, அவர் அளித்த பேட்டி: அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் காவலாளிகளுக்கு, தீயை அணைக்க தெரிந்திருப்பது அவசியம்.
எனவே, காவலாளிகளுக்கு, தீயணைப்பு தொடர்பான அடிப்படை பயிற்சிகளை அளிக்க முடிவு செய்தோம். அதன்படி, மாநிலம் முழுதும், 384 தீயணைப்பு நிலையங்களில், 6,000 காவலாளிகளுக்கு, காலை, 10:30 மணியில் இருந்து, மதியம், 1:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

