ADDED : அக் 21, 2024 04:41 AM

சென்னை : 'தீபாவளி பண்டிகைக்கு, இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்' என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
நாடு முழுதும் வரும் 31ம் தேதி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்று காலை 6:00 முதல் 7:00 மணி வரை; இரவு 7:00 முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் காற்று மாசு ஏற்படுத்தும் தன்மை உடைய பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி, பட்டாசுகளை வெடிக்க, அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் வழியாக முயற்சிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்கள்; குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில், பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.