சென்னை, மதுரையில் முதல்முறையாக உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி: சென்னை, மதுரையில் டிசம்பரில் நடத்தப்படுகிறது
சென்னை, மதுரையில் முதல்முறையாக உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி: சென்னை, மதுரையில் டிசம்பரில் நடத்தப்படுகிறது
ADDED : மார் 29, 2025 06:55 AM

மதுரை : தமிழகத்தில் முதன்முறையாக 14வது உலகக்கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை, மதுரையில் டிசம்பரில் நடக்க உள்ளன. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அதற்கான மைதானம், பார்வையாளர்கள் காலரி உருவாக்கப்பட உள்ளது.
ஹாக்கி வரலாறு
தமிழகத்தின் ஹாக்கி வரலாற்றில் 80 சதவீத வீரர்கள் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தான். மதுரையில் 50 ஆண்டுகளுக்கு முன் இரு சீனியர் தேசிய போட்டிகள், ஒரு ஜூனியர் போட்டிகள், பிரான்ஸ் அணி பங்கேற்ற, 'எக்ஸிபிஷன்' போட்டிகள் நடந்துள்ளன.
உலகக்கோப்பை போட்டிகள் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
கடந்தாண்டு மலேசியாவில் நடந்த ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 4ம் இடம் பெற்றது.
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஹாக்கி மைதானம் இருந்தாலும் அதற்கென பார்வையாளர்கள் காலரி இல்லாததால் தேசிய, சர்வதேச போட்டிகள் நடக்கவில்லை.
முதன்முறையாக சர்வதேச போட்டி நடத்துவதற்கான அடித்தளம், மதுரைக்கு கிடைத்துள்ளது.
இதற்காக ஓராண்டு முயற்சி செய்யப்பட்டது என்கின்றனர் ஹாக்கி இந்தியா சங்க தேசிய பொருளாளர் சேகர் மனோகர், மதுரை மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் கண்ணன்.
டிசம்பரில் போட்டி
அவர்கள் கூறியதாவது:
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தற்போதுள்ள செயற்கை புல்தரை ஹாக்கி அரங்கு சர்வதேச போட்டிக்கு ஏற்றவாறு 55 மீட்டர் அகலம், 91 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை போட்டிக்காக புது புல்தரை அமைக்கப்படும். அரங்கு அருகிலேயே ஒரு பக்க பார்வையாளர்கள் காலரி.
வி.ஐ.பி., லாஞ்ச், அம்பயர், டெக்னிக்கல் அணியினருக்கான அறைகள், வீரர்களுக்கான ஓய்வறை, மீடியா அறையுடன் மற்றொரு பக்கத்தில் தற்காலிக காலரி அமைக்கப்படும். மின்னொளியில் விளையாடும் வசதி ஏற்படுத்தப்படும்.
அருகிலேயே, 'வார்ம் அப்' பயிற்சிக்கான சிறிய ஹாக்கி அரங்கும் அமைக்கப்படும். இங்குள்ள நட்சத்திர ஹோட்டல்கள், விமான நிலையம் உட்பட பல்வேறு தகவல்களை சேகரித்து, ஹாக்கி இந்தியாவிற்கு அனுப்பிஉள்ளோம்.
இந்த நிலையில் வரும் டிசம்பரில் ஜூனியர் உலகக்கோப்பை நடத்த உறுதி செய்யப்பட்டது ஹாக்கி வீரர்களையும், பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்துகிறது. இதற்காக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, 55 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.
நடக்கவுள்ள, 14வது ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில், 24 அணிகள், 72 போட்டிகளில் பங்கேற்க உள்ளன. போட்டிகள் நாக்அவுட், லீக் முறையில் நடைபெறும்.
பாதி போட்டிகள் மதுரையிலும், காலிறுதிக்கு மேல் சென்னையிலும் நடத்தப்படலாம். இந்திய அணி மதுரையில் ஒருமுறை விளையாடும். இதன் மூலம், ஹாக்கி உலகத்தின் மொத்த பார்வையும், மதுரைக்கு கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.