கடந்த 6 ஆண்டுகளில் இதுவே ரொம்ப அதிகம்... மீனவர்கள் கைது விவகாரம்; முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கடந்த 6 ஆண்டுகளில் இதுவே ரொம்ப அதிகம்... மீனவர்கள் கைது விவகாரம்; முதல்வர் ஸ்டாலின் கடிதம்
UPDATED : செப் 09, 2024 11:54 AM
ADDED : செப் 09, 2024 11:49 AM

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சிறைபிடிப்பு
அவர் எழுதிய கடிதம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு, கடந்த 7-09-2024 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களும், அவர்களது மூன்று மீன்பிடி விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவே அதிகம்
2024ஆம் ஆண்டில் மட்டும் 350 மீனவர்கள் மற்றும் 49 மீன்பிடிப் படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன என்றும், கடந்த ஆறு ஆண்டுகளில் இதுவே மிக அதிகமானதென்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கை நீதிமன்றங்கள் மீனவர்களின் சக்திக்கு மீறிய அபராதங்களை விதித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே
இலங்கை அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள், தமிழக மீனவர்கள் அங்கு சிறையில் இருக்கும் காலத்தை நீட்டிக்க வழி செய்வதோடு, ஏற்கனவே துயரத்தில் உள்ள மீனவக் குடும்பங்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கி அவர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பிற்கும் வழி வகுக்குமென்று தனது முந்தைய கடிதத்திலேயே சுட்டிக்காட்டியுள்ளதை நினைவுகூர்ந்துள்ளார்.
கூட்டம்
எனவே, இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறும், மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்திடவும், கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தைக் விரைந்து நடத்திடவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.