ராணுவ அதிகாரி வீசிய தோட்டாக்கள் தேடும் பணியில் மீனவர்கள் தீவிரம்
ராணுவ அதிகாரி வீசிய தோட்டாக்கள் தேடும் பணியில் மீனவர்கள் தீவிரம்
ADDED : ஜூலை 13, 2011 01:02 AM
சென்னை : சிறுவனைச் சுட்ட ராணுவ அதிகாரி, கூவத்தில் வீசிய தோட்டாக்களை தேடும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.
தேடும் பணியில், போலீசாருக்கு உதவியாக, 12 மீனவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை தீவுத்திடல் இந்திரா நகரைச் சேர்ந்த சிறுவன் தில்ஷன், கடந்த வாரம் ராணுவ அதிகாரிகள் குடியிருப்புக்குச் சென்றபோது, ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில், பரிதாபமாக இறந்தான். முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், இந்த வழக்கு, சென்னை போலீசிடமிருந்து சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்பட்டது.
தில்ஷனுடன் சென்ற சிறார்கள் இருவர் கொடுத்த தகவலின் பேரில், துப்பாக்கியால் சுட்டது ராணுவ அதிகாரி தான் என தெரிய வந்தது. தொடர் விசாரணை நடந்தி, ராமராஜ், 58, என்ற ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, சிறுவனைச் சுட்டதும், காரில் துப்பாக்கியை எடுத்துச் சென்று கூவத்தில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்ததும் தெரிய வந்தது. போலீசார், சிறுவனை சுட பயன்படுத்திய துப்பாக்கியை, பறிமுதல் செய்தனர். ராமராஜ், மொத்தம் 50 தோட்டாக்கள் வைத்திருந்தார். சிறுவனைச் சுட்டதன் மூலம் ஒன்றும், தவறிய இரண்டும் போக, மீதம் 47 தோட்டாக்கள் இருக்க வேண்டும். துப்பாக்கியைக் கைப்பற்றியபோது, போலீசார் எட்டு தோட்டாக்களைக் கைப்பற்றினர். 'மீதமுள்ள 39 தோட்டாக்களை, பையில் சுற்றி, நேப்பியர் பாலம் அருகே, கூவத்தில் போட்டேன்' என, கைதான ராமராஜ் கூறியதால், தோட்டாக்களை தேடும் பணியில், போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். போலீசுக்கு உதவியாக, 12 மீனவர்கள், கூவத்தில் மூழ்கி தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.