ADDED : ஜன 26, 2025 03:13 AM
சென்னை: சமூக வலைதளத்தில் நீதிபதி குறித்து அவதுாறு கருத்து பரப்பிய, குற்ற வழக்குகளில் தொடர்புடைய, ஐந்து வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.சரபோஜி ராஜன் மீது, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்தில், சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
கோவை மாவட்டம், கணியூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், பல்லடம் பார் அசோசியேஷனுக்கான, 'வாட்ஸாப்' குழுவில், அங்குள்ள நீதிபதி குறித்து அவதுாறாக கருத்து பதிவிட்டுள்ளார்.
இதேபோல, சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.பன்னீர்செல்வம், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் அசோக்குமார், நாகை மாவட்டம், வெள்ளிப்பாளையம் வழக்கறிஞர் ஜெயவிஜயகமலன் ஆகியோர் மீது, கொலை, கொலை மிரட்டல் போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
எனவே, இவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்படுகிறது. குற்றச்சாட்டுக்கு ஆளான வழக்கறிஞர்கள், நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் உள்ளிட்டவற்றில் ஆஜராகவும் தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.