வைகை அணையில் வெள்ள அபாயம்; நீர்மட்டம் 69 அடியாக உயர்வு உபரி நீர் வெளியேற்றம்
வைகை அணையில் வெள்ள அபாயம்; நீர்மட்டம் 69 அடியாக உயர்வு உபரி நீர் வெளியேற்றம்
ADDED : அக் 21, 2025 02:57 AM

ஆண்டிபட்டி: வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கரையோரங்களில் உள்ள பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க நீர்வளத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை வருஷநாடு மலைப்பகுதியில் 3 நாட்களாக மழை தொடர்ந்து பெய்கிறது. இதனால் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வருஷநாடு மலைப் பகுதியில் மழைக் காலத்தில் உற்பத்தியாகும் பல சிற்றாறுகள் ஒன்று சேர்ந்து மூல வைகை ஆறாக வாலிப்பாறை, தும்மக்குண்டு, முருக்கோடை, வருஷநாடு, கடமலைக்குண்டு, துரைச்சாமிபுரம், கண்டமனூர், அம்மச்சியாபுரம், குன்னுார் வழியாக வைகை அணை சென்றடைகிறது.
முல்லைப் பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரிப்பதால் நேற்று மதியம் 1:00 மணிக்கு அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்தது.
மொத்த உயரம் 71 அடி. பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணைக்கு வரும் உபரி நீர் வைகை ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.
மதியம் 3:00 மணிக்கு அணை நீர்மட்டம் 69.05 அடியாக உயர்ந்தது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4738 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து பெரிய, சிறிய மதகுகள் வழியாக வைகை ஆற்றில் வினாடிக்கு 2000 கன அடியும், கால்வாய் வழியாக வினாடிக்கு 1349 கன அடியும் திறந்து விடப்பட்டு உள்ளது.
எந்த நேரத்திலும் கூடுதல் நீர் திறக்கப்படும் வாய்ப்புள்ளதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆற்றின் கரையோரங்களில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க நீர்வளத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.