பழவேற்காட்டில் பறவைகள் இறப்பு; வனத்துறை அதிகாரிகள் விசாரணை:
பழவேற்காட்டில் பறவைகள் இறப்பு; வனத்துறை அதிகாரிகள் விசாரணை:
UPDATED : பிப் 17, 2024 07:54 AM
ADDED : பிப் 17, 2024 12:24 AM

சென்னை:பழவேற்காடு சரணாலய பகுதியில் தொடர்ந்து பறவைகள் இறப்பு குறித்து, வனத்துறை மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு சரணாலய பகுதியில், பூநாரை, வர்ண நாரை, கூழைக்கடா, கடல்பொந்தா, ஊசிவால் வாத்து, உல்லான் என, 126 வகையான பறவைஇனங்கள் உள்ளன.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக அண்ணாமலைச்சேரியில் இருந்து, 2 கி.மீ., தொலைவில் ஏரியின் மையப்பகுதியில், உல்லான், ஊசிவால் வாத்து, நாரை உள்ளிட்ட பறவைகள் கொத்து கொத்தாக செத்து மடிந்தன. இறந்து அழுகிய நிலையில் பறவைகளின் உடல்கள் சிதிறி கிடக்கின்றன.
பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் வனத்துறை அலுவலர்கள் அங்கு முகாமிட்டு, பைனாகுலர் உதவியுடன் கண்காணித்து, இறந்து கிடக்கும் பறவைகளை சேகரித்துவருகின்றனர்.
கால்நடை மருத்துவ குழுவினர் இறந்த பறவைகளை ஆய்விற்கு உட்படுத்தி வருகின்றனர்.
ஏரியில் ரசாயன கழிவுகள் ஏதும் கலந்து பறவைகள் இறந்ததா? பருவநிலை மாற்றத்தால் இறக்கின்றனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வறிக்கை வந்த பிறகே, பறவைகள் இறப்பு குறித்து முழுமையான விபரம் தெரியவரும் என, வனத்துறையினர் கூறுகின்றனர்.
பறவைகள் திடீரென கொத்து கொத்தாக இறந்து வருவது அண்ணாமலைச்சேரி கிராம மக்களிடையே பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அப்பகுதி மீனவர் குழந்தைவேலு தெரிவித்ததாவது:
அண்ணாமலைச்சேரி ஏரிப்பகுதியில் தான் அதிகளவில் பறவைகள் இருக்கும்.
பறவைகள் இறப்பதுகவலையை ஏற்படுத்தி உள்ளது. ஏரியின் அடுத்த கரைப்பகுதியான ஆந்திர எல்லையிலும் பறவைகள் இறந்திருக்கலாம். வனத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.