நடைபயிற்சிக்கு சென்ற வனத்துறை மோப்ப நாய் அரசு பஸ்ஸில் அடிபட்டு பலி
நடைபயிற்சிக்கு சென்ற வனத்துறை மோப்ப நாய் அரசு பஸ்ஸில் அடிபட்டு பலி
UPDATED : ஜூலை 20, 2025 07:30 AM
ADDED : ஜூலை 20, 2025 07:15 AM

கோவை: பொள்ளாச்சி அருகே, வனத்துறை மோப்ப நாய், அரசு பஸ்சில் அடிபட்டு இறந்தது.
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டத்தில், பொள்ளாச்சி, வால் பாறை,மானாம்பள்ளி, டாப்சிலிப் வனச்சரகங்கள் உள்ளன. வனக் குற்றங்களை தடுக்க வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் இணைந்து ரோந்து சென்று வருகின்றனர்.
வனக்குற்றங்களில் ஈடுபடுவோரை கண்டறியும் வகையில், வனத்துறை சார்பில் மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டது. நாயினை பயன்படுத்தி வனக்குற்றங்கள் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், நேற்று பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலக வளாகத்துக்கு வெளியே வந்த மோப்ப நாய், அரசு பஸ் சில் அடிபட்டு இறந்தது.
இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சியிலுள்ள துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில், 'பைரவா'என்ற மோப்ப நாய் நடைபயிற்சி மேற்கொண்டது.
அப்போது, வளாகத்துக்கு வெளியே, தெருநாய்கள் கூட்டத்தை கண்ட மோப்பநாய், வனக்காவலரின் கட்டுப்பாட்டை இழந்து வளா கத்தை விட்டு வெளியே ஓடியது. அப்போது, அவ்வழியாக வந்த அரசு பஸ்சில் எதிர்பாராதவிதமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தது,' என்றனர்.