கண்ணீர் சிந்திய அ.தி.மு.க., 'மாஜி'; நிர்வாகிகள் கூட்டத்தில் உருக்கம்
கண்ணீர் சிந்திய அ.தி.மு.க., 'மாஜி'; நிர்வாகிகள் கூட்டத்தில் உருக்கம்
UPDATED : ஜூலை 29, 2025 04:19 AM
ADDED : ஜூலை 29, 2025 12:19 AM

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்ணீர் சிந்தியபடி பேசினார்.
தமிழகம் முழுதும், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, ஆக., 7ல் சிவகாசி வருகிறார். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடந்தது.
இதில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:
மோசடி வழக்கில், தி.மு.க., அரசு என்னை சிறையில் அடைத்தபோது, அ.தி.மு.க.,விற்கு எதிராக பிரமாண பத்திரத்தில் கையெழுத்து போடச் சொல்லி என்னை மிரட்டினர். தனிமை சிறையில் அடைத்து, மிரட்டி பணிய வைக்க முயற்சித்தனர்; அதற்கும் நான் கட்டுப்படவில்லை.
நான் செத்தாலும் சாவேனே தவிர, அ.தி.மு.க.,வை காட்டிக் கொடுக்க மாட்டேன். தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், என்னை வேட்டையாடியது; எதற்கும் நான் அஞ்சவில்லை. நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. சிவகாசி தொகுதியில் தான் மீண்டும் போட்டியிடுவேன்; நிச்சயம் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் பேசியபோது, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.