மாஜி முதல்வருக்கு சீட் இல்லை: புதுச்சேரி காங்., தலைவர் வீடு முற்றுகை
மாஜி முதல்வருக்கு சீட் இல்லை: புதுச்சேரி காங்., தலைவர் வீடு முற்றுகை
ADDED : மார் 23, 2026 10:32 PM

புதுச்சேரி:புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு சீட் வழங்காததை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள், காங்., தலைவர் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி. காங்., கட்சியை சேர்ந்த இவர், மூன்று முறை ராஜ்ய சபா எம்.பி.,யாகவும், 2009-14 ம் ஆண்டில் லோக்சபா எம்.பி.,யாக தேர்வு பெற்று, மத்திய இணை அமைச்சராக பதவி வகித்தவர்.
கடந்த 2016ம் ஆண்டு புதுச்சேரி சட்டசபை தேர்தலில், காங்.,-தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதல்வரான நாராயணசாமி, நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆட்சியின் இறுதிகட்டமான 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைச்சரவையில் இருந்த அமைச்சர், சபாநாயகர், எம்.எல்.ஏ.,க்கள் கட்சியில் இருந்து விலகியதால், ஆட்சி கவிழ்ந்தது.
அதையடுத்து, 2021 சட்டசபை தேர்தலில் காங்.,-தி.மு.க., கூட்டணி போட்டியிட்டது. முதல்வராக இருந்த நாராயணசாமி தேர்தலில் போட்டியிடவில்லை. காங்., போட்டியிட்ட 15 தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 13 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க., 6 தொகுதிகளில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
தேர்தலில், காங்., கட்சி தோல்வியுற்ற போதிலும், அக்கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ஆளும் என்.ஆர்.காங்., கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தார்.
நெல்லித்தோப்பில் தேர்தல் பணி இவர், கடந்த 2016-21 தேர்தலில் தன்னை எம்.எல்.ஏ.,வை தேர்ந்தெடுத்த நெல்லித்தோப்பு தொகுதியில் இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு செயது, தொகுதியில் அலுவலகம் திறந்து நலத்திட்டங்கள் வழங்கி வந்தார்.
புதுச்சேரியில் இண்டி கூட்டணி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தவறாமல் பங்கேற்றார். இவர், தனக்காக, நெல்லித்தோப்பு தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என கூட்டணியில் வலியுறுத்தினார்.
பேச்சுவார்த்தை தோல்வி ஆனால், தி.மு.க., கடந்த முறை 400 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த நெல்லித்தோப்பு தொகுதியை இம்முறை நாங்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதனால், தொகுதியை விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டது. இதன் காரணமாக தொகுதி பங்கீட்டு பேச்சவார்த்தை நள்ளிரவில் பாதியில் தடைப்பட்டது.
மனு தாக்கல் நேற்று மனு தாக்கலுக்கு இறுதி நாள் என்பதால், தொகுதி உடன்பாட்டை எதிர்பார்க்காமல், காங்., மற்றும் தி.மு.க.,வினர் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மனு தாக்கல் செய்தனர்.
'பி' பார்ம் வழங்க மறுப்பு அவ்வாறு மனு தாக்கல் செய்த காங்., கட்சியினருக்கு, அக்கட்சியின் தலைவரான வைத்திலிங்கம், கட்சி அங்கீகார 'ஏ' மற்றும் 'பி' படிவங்களை அவரது வீட்டில் வைத்து வழங்கினார். ஆனால், நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட நாராயணசாமிக்கு 'ஏ' மற்றும் 'பி' படிவங்கள் வழங்கவில்லை.
தலைவர் வீடு முற்றுகை இதனால், ஆத்திரமடைந்த நாராயணசாமியின் ஆதரவாளர்கள் நேற்று காலை கந்தப்ப முதலி தெருவில் உள்ள வைத்திலிங்கம் வீட்டை முற்றுகையிட்டு, அவரை கண்டித்தும், தலைவர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தள்ளுமுள்ளு அதையடுத்து, பகல் 12:00 மணியளவில், வைத்திலிங்கம் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு மனு தாக்கல் செய்ய வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். அப்போது, நாராயணசாமி ஆதரவாளர்கள் அவரது கார் முன்பு படுத்தும், பைக்குகளை சாலையில் நிறுத்தியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அதனால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பின், நாராயணசாமி ஆதரவாளர்களை போலீசார் அப்புறப்படுத்தி, வைத்திலிங்கத்தை மனுதாக்கல் செய்ய அனுப்பி வைத்தனர். இப்போராட்டத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

