அனைத்து குடும்ப தலைவிக்கும் ரூ.1,500 மாஜி அமைச்சர் தங்கமணி வாக்குறுதி..
அனைத்து குடும்ப தலைவிக்கும் ரூ.1,500 மாஜி அமைச்சர் தங்கமணி வாக்குறுதி..
ADDED : ஜன 18, 2025 01:41 AM
பள்ளிப்பாளையம்: “அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும்,” என, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவில், முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் ஆவாரங்காடு பகுதியில், அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
தமிழகத்தில் பொற்கால ஆட்சியை எம்.ஜி.ஆர்., தந்துள்ளார். அவர் சத்துணவு கொடுத்ததால் தான், படித்தவர்களின் மாநிலங்களில் தமிழகம் இன்று முன்னிலையில் உள்ளது.
தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை, எங்கே சென்றாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த ஆட்சியை அப்புறப்படுத்தியாக வேண்டும். இல்லை என்றால், தமிழகத்தின் நிலை மோசமாகும்.
ஊராட்சியை நகராட்சி, பேரூராட்சியுடன் தற்போது இணைத்து வருகின்றனர்.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் ஊராட்சியாக மாற்றப்படும் என, வாக்குறுதியாக அளிக்கிறேன். இன்னும் ஓராண்டுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டார்கள்.
அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும். இதையும் வாக்குறுதியாக அளிக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.