ADDED : ஜன 16, 2025 11:32 PM

ராசிபுரம்:நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பச்சடையாம்பாளையத்தை சேர்ந்தவர் பி.ஆர். சுந்தரம், 73. அ.தி.மு.க.,வை சேர்ந்த இவர், ஊராட்சி தலைவராக அரசியலுக்குள் நுழைந்தார். பின், நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலரானார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் ஜெயலலிதா அணியில் சேர்ந்தார். 1996 சட்டசபை தேர்தலில் ராசிபுரம் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996ல், ஜெயலலிதாவே தோற்றார்.
கடந்த, 2014 முதல் 2019 வரை நாமக்கல் லோக்சபா தொகுதி எம்.பி.,.யாக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக முதன் முதலில் குரல் கொடுத்தார். அதனால், இவரை பன்னீர்செல்வம் ஆதரவாளர் என ஒதுக்கத் தொடங்கினர்.
இதனால், விரக்கியடைந்த சுந்தரம், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தார். தி.மு.க.,வில், அவருக்கு மாநில கொள்கை பரப்பு துணை செயலர் பதவி வழங்கப்பட்டது.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுந்தரம், சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை, 7:30 மணிக்கு ராசிபுரத்தில் உள்ள தன் இல்லத்தில் காலமானார்.
இந்நிலையில், சுந்தரம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், சுந்தரம் மனைவி சுந்தரியை போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.