UPDATED : ஜன 22, 2026 12:04 AM
ADDED : ஜன 21, 2026 07:01 AM

திருச்சி: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ்., அணியின் முக்கிய நிர்வாகியுமான, தஞ்சையைச் சேர்ந்த வைத்திலிங்கம் இன்று (ஜனவரி 21) திமுகவில் இணைந்தார்.
தஞ்சையைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இன்று காலை தலைமைச் செயலகம் வந்தார். அவர் தனது ஒரத்தநாடு எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர் திமுகவின் அண்ணா அறிவாலயம் சென்றார்.அங்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் வைத்திலிங்கம் இணைந்தார்.
உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்த வைத்திலிங்கம், தற்போது மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு எடுத்துள்ளார். கூட்டணி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சரியான முடிவெடுக்கவில்லை என பன்னீர்செல்வம் மீது கடும் அதிருப்தியில் இருந்த வைத்திலிங்கத்துக்கு, தி.மு.க., மற்றும் த.வெ.க.,வில் இருந்து தொடர் அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது.
தற்போது அவர் திமுகவில் ஐக்கியமானார். அதிமுகவில் இருந்த போது அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
யார் இந்த வைத்திலிங்கம்!
* ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் இருந்து நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர் வைத்திலிங்கம், 71.
* ஜெயலலிதா, இபிஎஸ் அமைச்சரவைகளில் தொழில், வனம், சுற்றுச்சூழல், வீட்டு வசதி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். ராஜ்யசபா எம்.பி., ஆகவும் இருந்தவர்.
* அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்த இவர், ஒரு காலத்தில், அதிமுக முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்தார். சசிகலா தரப்புக்கு நெருக்கமானவராக கருதப்பட்டவர்.
* பிற்காலத்தில் ஓபிஎஸ் உடன் தனியாக பிரிந்து செயல்பட்டு வந்தார். இப்போது திமுகவில் இணைந்துள்ளார்.
மக்கள் மனதில்….!
திமுகவில் இணைந்த பிறகு வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக பழனிசாமி தலைமையில் செயல்படுவது சிறந்ததாக இல்லை. இன்றைக்கு முதல்வர் ஸ்டாலினை தமிழக மக்கள் போற்றுகிறார்கள், புகழ்கிறார்கள். எல்லோருடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய திட்டங்களை அமல்படுத்தி, மக்களின் மனதில் தமிழக முதல்வர் இருக்கிறார். நான் அதிமுகவில் இருந்து விலகினாலும் அண்ணாதுரை ஆரம்பித்த தாய் கழகமான திமுகவில் என்னை இணைத்து கொண்டு இருக்கிறேன்.
மக்கள் சேவை
ஓபிஎஸ் விட்டு விலகி வருவதற்கு காரணம், தேர்தல் விரைவில் வர இருக்கிறது. முடிவு விரைவில் எடுக்க வேண்டும். கால தாமதமானது. இதனால் திமுகவில் இணைந்தேன். நாங்கள் எந்த டிமாண்ட் வைக்கவில்லை. நான் கேட்கவில்லை. திமுகவில் இருந்து வந்தது அதிமுக. திராவிட இயக்கம், அது தாய் கழகம். திராவிடக் கழகம் வந்து சமூக நீதிக்காக ஆரம்பித்தது. அரசியலுக்காக, மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பித்தது திமுக. அதனால் நான் திமுகவில் இணைந்து இருக்கிறேன்.
பாடுபடும் திமுக
தஞ்சையில் வரும் 26ம் தேதி பலர் திமுகவில் இணையவுள்ளனர். அன்றைய தினம் இணைப்பு விழா நடக்கிறது. அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை. சர்வதிகாரமாக செயல்படுகிறது. அதிமுகவில் சேருவதற்கு என்னை தனிப்பட்ட முறையில் அழைத்தார்கள். நான் செல்வதற்கு தயாராக இல்லை. ஒன்றாக இணைந்தால் தான் சேர வேண்டும் என இருந்தேன். அவரது நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு இப்பொழுது திமுக தான் பாடுபட்டு கொண்டு இருக்கிறது. அதனால் இந்த கட்சியில் நான் இணைந்தேன். இவ்வாறு வைத்திலிங்கம் கூறினார்.

