காரில் வந்து பஸ்சில் நகை திருட்டு ம.பி.,யைச் சேர்ந்த நால்வர் கைது
காரில் வந்து பஸ்சில் நகை திருட்டு ம.பி.,யைச் சேர்ந்த நால்வர் கைது
ADDED : ஆக 13, 2025 02:32 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து காரில் வந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே ஓட்டலில் நின்றிருந்த ஆம்னி பஸ்சில் ஏறி பெண் பயணியின் கைப்பையில் இருந்த மூன்றரை பவுன் நகையை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் பட்டமுத்து 32. இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். சொந்த ஊருக்கு வந்திருந்த இவர் ஆக.10 இரவு சங்கரன்கோவிலில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ்சில் மனைவியுடன் பயணித்துள்ளார். இரவு 8:50 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அழகாபுரியில் ஓட்டலில் சாப்பிடுவதற்காக பஸ் நிறுத்தப்பட்டு, பட்டமுத்து, மனைவி உட்பட பஸ்ஸில் இருந்த அனைவரும் இறங்கி சென்றனர். பின்னர் வந்துபார்த்தபோது பட்டமுத்துவின் மனைவி கைப்பையில் வைத்திருந்த மூன்றரை பவுன் தங்க நகைகளை காணவில்லை. இதனையடுத்து நத்தம்பட்டி போலீசார் ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது மத்திய பிரதேச மாநில பதிவு எண் கொண்ட ஒரு காரில் 4 பேர் ஏறிச் செல்வது தெரிய வந்தது. வழித்தட பாதைகளை போலீசார் ஆய்வு செய்தபோது கார் மதுரையில் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
அங்கு சென்ற போலீசார் மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தைச் சேர்ந்த அப்பாஸ் கான் 32, அக்ரம் கான் 26, மோலா 36, அக்ரம் முல்தானி 26, ஆகியோரை பிடித்து விசாரித்தனர். காரில் வந்து அழகாபுரி ஓட்டலில் நின்றிருந்த பஸ்சில் ஏறி நகையை திருடியாக அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களின் காரையும், ரூ 1.4 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோல் தமிழகத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.