ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு; பதில் மனு தாக்கல்
ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு; பதில் மனு தாக்கல்
ADDED : ஜன 06, 2026 05:18 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்க கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் தாக்கல் செய்த மனுவிற்கு விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்துாரைச் சேர்ந்த ரவீந்திரனின் சகோதரி மகனுக்கு ஆவினில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக 2021ல் குற்றப்பிரிவு போலீசில் ரவீந்திரன் புகார் அளித்தார். இதுதொடர்பாக விஜய் நல்லதம்பி, ராஜேந்திர பாலாஜி, முத்துப்பாண்டி, மாரியப்பன், பாண்டியராஜன், ரவி கணேசன், ராமகிருஷ்ணன், நாகேஷ் ஆகியோர் மீது ஒரு வழக்கும், ராஜேந்திர பாலாஜி பணம் பெற்றுக் கொண்டு தன்னை ஏமாற்றியதாக விஜய நல்ல தம்பி அளித்த புகாரில் ராஜேந்திர பாலாஜி உட்பட 7 பேர் மீது மற்றொரு வழக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்க கோரி ராஜேந்திர பாலாஜி, முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராம், பாண்டியராஜன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
நேற்று இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ராஜேந்திர பாலாஜி, நல்லதம்பி ஆஜராகவில்லை. மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., உதயசூரியன், நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து அனைத்து மனுக்களின் மீதான விசாரணை ஜன., 23 அன்று நடக்கும் எனக்கூறி, விசாரணையை நீதிபதி ஜெயக்குமார் ஒத்திவைத்தார்.

