ADDED : பிப் 06, 2026 03:07 AM

சென்னை: நி தி நிறுவன மோசடி வழக்கில், தேவநாதனின் ஜாமின் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை மயிலாப்பூரில், 'தி ஹிந்து பெர்மனன்ட் பண்ட்' என்ற நிதி நிறுவனத்தில், முதலீட்டாளர்களிடம் இருந்து, 24.50 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, அதன் இயக்குநர் தேவநாதன் உள்பட ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.
தேவநாதன் உள்ளிட்டோர், மூன்றாவது முறை யாக தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், '100 கோடி ரூபாயை விசாரணை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும்' என்ற நிபந்தனையுடன், இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
நிபந்தனையை நிறைவேற்றாததால், நீதிமன்ற உத்தரவின்படி, தேவநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் தேவநாதன் மீண்டும் தாக்கல் செய்த மனு, நீதிபதி ராஜசேகர் முன் விசாரணைக்கு வந்தது .
அப்போது காவல் துறை தரப்பில், சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறி, ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேவநாதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

