முதல்வர் பேசுவது போல் வீடியோ வெளியிட்டு மோசடி செய்தவர் கைது
முதல்வர் பேசுவது போல் வீடியோ வெளியிட்டு மோசடி செய்தவர் கைது
ADDED : செப் 15, 2026 05:45 AM

சென்னை: 'ஏஐ' எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக, முதல்வர் விஜய் ஹிந்தியில் பேசுவது போல், 'வீடியோ' வெளியிட்டு, பண மோசடி செய்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த, ஷயாபுகான், 28, என்பவர் கைது செய்யப்பட்டார்.
பொது மக்களுக்கு ஏதேனும் பண உதவி தேவைப்பட்டால், இந்த 'வாட்ஸாப்' எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, முதல்வர் விஜய் ஹிந்தியில் பேசுவது போல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 'வீடியோ'க்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த வீடியோக்கள், பாகிஸ்தானை சேர்ந்த நபர்களின், 'முகநுால் கணக்கில் இருந்து பகிரப்பட்டு இருக்கலாம்' என, சந்தேகம் எழுந்தது.
இது குறித்து, தமிழக காவல் துறையின், சி.பி.சி.ஐ.டி., சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, மர்ம நபர்கள், முதல்வர் விஜய் ஹிந்தியில் பேசுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு, ம.பி., மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்களிடம், பண மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, இரண்டு தனிப்படை போலீசார், ராஜஸ்தான் மற்றும் ம.பி.,யில் முகாமிட்டு, விசா ரணை நடத்தினர். சந்தேக நபர்கள் குறித்து, பட்டியல் தயாரித்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கிய நபரான, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஷயாபுகான், 28, என்பவரை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
