அரசு நிலத்தை அரசுக்கே விற்று மோசடி: ரூ.18.10 கோடி சொத்துக்கள் முடக்கம்
அரசு நிலத்தை அரசுக்கே விற்று மோசடி: ரூ.18.10 கோடி சொத்துக்கள் முடக்கம்
UPDATED : நவ 21, 2025 06:00 AM
ADDED : நவ 21, 2025 04:35 AM

சென்னை: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் 'சிப்காட்' விரிவாக்கத்திற்கு, அரசு நிலத்தை அரசுக்கே விற்று இழப்பீடு பெற்றதில் நடந்த சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, 15 இடங்களில் சோதனை நடத்தி, 18.10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு, பீமந்தாங்கல் கிராமத்தில், அரசு அனாதீன நிலங்களுக்கு முறைகேடாக பட்டா பெற்று, அவற்றை அரசுக்கே விற்று, 33 கோடி ரூபாய் இழப்பீடு பெறப்பட்டு உள்ளது.
இழப்பீடு நெமிலி கிராமத்தில், 2.24 லட்சம் சதுரடி உடைய ஓ.எஸ்.ஆர்., எனப்படும், அரசு நிலங்களுக்கு பத்திரம் பதிவு செய்தும், வல்லம், வடகால் கிராமங்களில், 'சிப்காட்' தொழிற்சாலை பகுதியில் உள்ள ஓ.எஸ்.ஆர்., எனப்படும் அரசு நிலங்களுக்கு, போலி பத்திரம் தயாரித்தும், 21 கோடி ரூபாய் மோசடியாக இழப்பீடு பெறப் பட்டுள்ளது.
வடகால் கிராமத்தில், 'வி.ஜி.பி., ஹவுசிங் டெவலப் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம், அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைப்பிரிவில் அமைந்துள்ள, சாலை, பூங்கா பரப்பான, 7.25 லட்சம் சதுரடி இடத்தை அரசுக்கு விற்று, 21.08 கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட போலீசார், நில எடுப்பின் போது, மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த ராஜேந்திரன், தாசில்தார் எழில்வளவன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், தனி நபர்கள் என, 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக, சென்னை ஸ்ரீநகர் காலனியில் வசித்து வரும், ரியல் எஸ்டேட் அதிபர் கலைச்செல்வன் வீடு உட்பட, 15 இடங்களில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
ஆய்வு அப்போது சிக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ததில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சிப்கார்ட் விரிவாக்கம் நடப்பதை முன் கூட்டியே அறிந்து, போலி ஆவணங்கள் வாயிலாக, நிலத்தின் சந்தை மதிப்பை உயர்த்தி காட்டி, அரசிடம் இருந்து கோடிக்கணக்கில் இழப்பீடு பெற்று மோசடி செய்திருப்பது,உறுதி செய்யப்பட்டது.
இதில், வி.ஜி.பி., குழுமத்தைச் சேர்ந்த ராஜேஷ், முக்கிய பங்கு வகித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
சோதனையில் சிக்கிய, 1.56 கோடி ரூபாய், 74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், 8.40 கோடி ரூபாய் வங்கி இருப்பு, 7.40 கோடி ரூபாய்க்கான பங்கு பத்திரங்கள் என, 18.10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

