ADDED : டிச 09, 2024 04:22 AM
சென்னை : தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாக கூட்டம், சமீபத்தில் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சங்கத்தின் மாநில தலைவர் நடராஜன் பாரதிதாஸ் கூறியதாவது:
கிராமப் புறங்களில் ஜாதிய அடக்கு முறையிலிருந்து தப்பித்தது, இந்த தலைமுறை தான். முடி திருத்தும் தொழிலை நம்பி, நகர்ப்புறங்களில் கடை வைத்து கொஞ்சம் முன்னேற்றம் கண்டனர்.
அதற்குள் புற்றீசல் போல் கார்ப்பரேட் சலுான் கடைகள், தமிழகம் முழுதும் திறக்கப்பட்டுள்ளன. உள்ளூரில் ஒரே முதலாளி, ஒரே பெயரில் பல நுாறு கடைகள் திறந்து, வெளி மாநில தொழிலாளர்களை வைத்து கடை நடத்துகின்றனர்.
அவர்களை போல, தொழில் நிலையம் அமைக்க முடியாமல், ஒன்று அல்லது இரண்டு நாற்காலிகள் போட்டு, முடிதிருத்தும் தொழில் செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து முடிதிருத்தும் தொழிலாளர்களும், வாடகை வீட்டில் தான் வசிக்கின்றனர். அதற்கான வாடகை, முன்பணம், பிள்ளைகளின் படிப்பு, கடைக்கு முன்பணம், வாடகை என பல்வேறு நிலைகளிலும், பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே, கைத்தறி மற்றும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு, இலவச மின்சாரம் வழங்குவது போல, முடி திருத்தும் தொழிலையே நம்பி வாழும் தொழிலாளர்களுக்கு, '200 யூனிட்' வரை இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.