விற்பனைக்கு வந்தது இலவச 'லேப்டாப்'; வலைதளங்களில் எளிதாக வாங்கலாம்
விற்பனைக்கு வந்தது இலவச 'லேப்டாப்'; வலைதளங்களில் எளிதாக வாங்கலாம்
UPDATED : ஜன 28, 2026 12:51 AM
ADDED : ஜன 28, 2026 12:50 AM

சென்னை: உயர் கல்வி பயிலும் மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசு இலவசமாக வழங்கியுள்ள 'லேப்டாப்'கள் சமூக வலைதளங்களின் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
நடப்பு நிதியாண்டில், 10 லட்சம் லேப்டாப்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டு, 'டெண்டர்' கோரப்பட்டது. அதன்படி, ஆறு லட்சம் 'ஏசர்' லேப்டாப்கள்; மூன்று லட்சம் எச்.பி., லேப்டாப்கள்; ஒரு லட்சம் 'டெல்' லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
அதிருப்தி
இதை தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லுாரிகளில், இறுதியாண்டு படிக்கும் மாணவ - மாணவியருக்கு, இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை, கடந்த 5ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இதற்கிடையில், இலவச லேப்டாப்களை பெற்ற மாணவ - மாணவியர் சிலர், அதன் மீதுள்ள கருணாநிதி, ஸ்டாலின் புகைப்படத்தை மறைத்து, தங்களுக்கு விருப்பமான 'ஸ்டிக்கர்' ஒட்டி, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். மாணவர்களின் இந்த செயல், அரசு தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
பயன்பாடு
இந்நிலையில், அரசுக்கு மற்றொரு பேரிடியாக, 'இலவச லேப்டாப்கள் விற்பனைக்கு' என்ற பதிவுகள், சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. 'இன்ஸ்டாகிராம், பேஸ்புக்' ஆகிய தளங்கள் வழியாக, இலவச லேப்டாப்களை மாணவர்கள் விற்பனை செய்து வருவதாக, பேராசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, கல்லுாரி பேராசிரியர்கள் கூறுகையில், 'மாணவர்களின் எதிர்கால நலனுக்காக வழங்கப்பட்ட லேப்டாப்களை, அவர்கள் முறையாக பயன்படுத்த வேண்டும். 'இருப்பினும் சிலர், அதை வணிக நோக்கத்துடன் பயன்படுத்துவதாக தகவல் வருகிறது. வலைதளங்கள் வழியாக, லேப்டாப்களை, 10,000 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.
'எனவே, உயர் கல்வித் துறை, லேப்டாப் வழங்கியதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்காமல், அதன் நிலை, பயன்பாடு குறித்து கண்காணிக்க, ஓர் திட்டத்தை வகுக்க வேண்டும்' என்றனர்.

